14 மாவட்டங்களில் நாளை கனமழை.. வானிலை மையம் மகிழ்ச்சி செய்தி.. உங்க மாவட்டமும் இருக்கா?
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. தற்போது, சில இடங்களில் மட்டுமே ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
இது திமுக - பாஜக இடையேயான போர்.. ஒருத்தரையும் விடமாட்டோம்.. போலீஸ் தலையிட வேண்டாம்.. அண்ணாமலை!
கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருக்குவளை, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, முகையூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூர், அகரம் சீகூர், வேப்பூர், காட்டுமலையூர், கீழச்செருவை, லப்பைக்குடிகாடு, ஜெயங்கொண்டம், பரங்கிப்பேட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை அறிவிப்பு
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27-29 தேதிகளில்...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 27-ம் தேதி, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல், 28 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, எந்தவிதமான அபாய எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்படவில்லை.