பரபரக்கும் தமிழகம்.. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்ட போலீஸார்
சென்னை: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி சுமார் 15,000 துணை ராணுவத்தினர் உட்பட 1 லட்சத்திற்கும் அதிகமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு துவங்க உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். இதனையடுத்து தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகம் மொத்தத்தில் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிய வந்துள்ளது இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சித்திரை திருவிழா நடைபெற்று வரும் மதுரை மாவட்டத்தில் 2719 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு துணை ராணுவம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் வெளியூர் காவல்துறையினர் என 6500க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற உள்ளனர். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் வெயிலில் கிடந்து போராடறீங்க.. வாங்க போலாம்னு.. ஸ்டாலின், கனிமொழி சொன்னாங்க.. அய்யாக்கண்ணு
நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 520 வாக்குச் சாவடிகள் முழுக்க முழக்க பெண்களே நிர்வகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை அதிகபட்சமாக 75 சதவீதம் பெண் ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்
நீலகிரியில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலின்றி மக்கள் வாக்களிக்க தைரியமாக முன்வருவதை உறுதி செய்யும் வகையில், நீலகிரி - கேரளா எல்லையில் 240 கிலோ மீட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவல்துறையினர், ஊர்காவல் படையினர் என சுமார் 5 ,000 பேர் நாளைய தேர்தலின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் 7,832 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 62 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் மொத்தம் 17,000 காவல்துறையினர், 7 கம்பெனி துணை ராணுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்