தமிழகத்தில் தமிழில் தான் பெயர்ப்பலகை நிறுவ வேண்டும்... வருகிறது புதிய நடைமுறை
சென்னை: தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் பிரதானமாக இருக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொழில் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் முதன்மையாக இல்லாவிட்டால் உரிய நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொழில் நிறுவனங்களோடு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சமரசமின்றி செயல்பட வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில்நிறுவன பெயர்ப்பலகைகளில் முதன்மையான இடத்தில் தமிழும், இரண்டாவதாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக பிற மொழிகளும் இடம்பெற வேண்டும் என வரிசைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் படி தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்கள் பெயர்ப்பலகையை வடிவமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தாலும் இந்த விதிமுறை அந்த நிறுவனங்களும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழின் பெருமையும், தொண்மையும் நிலைத்திருக்கும் என தமிழறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் விடுத்துள்ள அறிக்கையில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் பெயர்ப்பலகை வைத்தல் தொடர்பான சட்டவிதிகளை முறையாக பின்பற்றவில்லை எனில், பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி அது காற்றில் கரைந்தது போல், இந்த அறிவிப்பும் காற்றில் கரையாமல் இருந்தால் சரி.
இதனிடையே தமிழ் பெயர்ப்பலகை விவகாரத்தில் வெறுமனே அபராதம் மட்டும் விதிக்கப்பட்டால் அதை செலுத்திவிட்டு பன்னாட்டு பெரு நிறுவனங்கள் தங்கள் பெயர்ப் பலகைகளை மாற்ற முன் வராது என்பதால், கடும் நடவடிக்கை இருக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.