அதிமுகவில் ஆட்டம் போடும் அடிபொடிகள்... அரசு பெயரை கூறி மோசடிகள்... சாட்டையை சுழற்றுமா தலைமை..?
சென்னை: அதிமுகவை மூன்றாவது முறையாக வெற்றிபெற வைத்து சரித்திர சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த சூழலில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆட்சியாளர்களின் பெயரைக் கூறிக்கொண்டு அடிபொடிகள் போடும் ஆட்டம் அளவு கடந்து செல்கிறது.
இதற்கு உதாரணமாக வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, என பல இடங்களில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
ஜெயலலிதா காலம்
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுக ராணுவ கட்டுப்பாடுடன் இயங்கியது. தவறு செய்தது உண்மை எனத் தெரியவந்தால் அவர் எவ்வளவு பெரிய நிர்வாகியாக இருந்தாலும் சரி இருக்கும் இடம் தெரியாமல் ஒதுக்கி ஓரங்கட்டி அரசியலில் அடையாளம் காணாமல் செய்துவிடுவார் ஜெயலலிதா. பணம் இருக்கிறது, சாதி இருக்கிறது, கட்சியில் ரொம்ப காலம் இருக்கிறார் என்ற தயவு தாட்சண்யத்திற்கே ஜெயலலிதாவிடம் வேலை இருக்காது.
பெண்கள் விவகாரம்
தவறு என்றால் தவறு தான், அதுவும் பெண்கள் விவகாரத்தில் நிர்வாகிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் அந்த நபரை கம்பி எண்ண வைக்கவும் யோசிக்க மாட்டார். இப்படிப்பட்ட அதிமுகவில் அவரது மறைவுக்கு பிறகு ஏராளமான மாற்றங்கள் உருவாகியுள்ளன. உட்கட்சி ரீதியாக நடைபெற்றுள்ள அந்த மாற்றங்களை விமர்சிக்கத் தேவையில்லை. ஆனால் அதேவேளையில் அரசு திட்டங்களை பெற்றுத் தருவதாக கூறி விவரம் அறியாதவர்களிடம் அதிமுகவில் உள்ள சில அடிபொடிகள் போடும் ஆட்டங்கள் தான் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.
சுனாமி வீடு
வேளாங்கண்ணி பேரூர் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி லாசர் என்பவர், விதவை பெண் ஒருவரிடம் சுனாமி வீடு வாங்கித் தருவதாக கூறி தனது சபல புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ வெளியான பிறகு, பெரிய அரசியல் தலைவரை போல் இது எதிர்க்கட்சிக்காரர்களின் திட்டமிட்ட சதி என விநோத விளக்கம் கொடுத்து வருகிறார் லாசர். இந்த விவகாரம் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு தெரிந்தும் இது போன்ற நபர்களை இன்னும் கட்சியில் வைத்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என விவரிக்கிறார் உள்ளூர் செய்தியாளர்.
மோசடி நிகழ்வுகள்
இது உதாரணம் தான், இது போன்ற மோசடி, வக்கிர நிகழ்வுகளை முதியோர் உதவித் தொகை தொடங்கி விதவை உதவித் தொகை வரை பட்டியல் போட வேண்டுமானால் போட்டுக் கொண்டே செல்லலாம். அதிமுகவை 3-வது முறையாக வெற்றிபெற வைக்க வேண்டி உழைத்து வரும் முதல்வரும், துணை முதல்வரும் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து குறைந்தபட்சம் பதவியையாவது பறித்தால் தான் அது அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும் எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.