திருச்சி தமிழிசை, குமரி பொன்.ராதா, நெல்லை நயினார்.. திருப்பூர் வானதி, கோவை சிபிஆர்.. பாஜக லிஸ்ட்?
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. அந்த தொகுதிகள் எவை,எவை என்றும் யார்... யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
எப்போது என்று அனைவரும் பேசிவந்த அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்திய பியூஷ் கோயல் தலைமையிலான தேர்தல் குழு, 5 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது. 2ம் கட்ட பேச்சுவார்த்தை, 2 மணி நேரம் கடந்தும் நீடித்த ஆலோசனைக்கு பிறகு 5 தான் என்று முடிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதி தேர்தலின் போது.. அதிமுகவுக்கு ஆதரவளிப்பது என்றும் பாஜக ஒப்புக்கொள்ள... ஒரு வழியாக கூட்டணி அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது. 40ம் நமதே என்று மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் என்று பேட்டி அளித்துவிட்டு சென்றுள்ளார்.
எப்படி கிடைத்தது 5 தொகுதிகள்
12 தொகுதிகள், 10 தொகுதிகள்... இல்லை இல்லை 8 தொகுதிகள் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் 5 தொகுதிகளுக்கு பாஜக தலையாட்டி உள்ளது. தமிழகத்தில் பரவலாக வாக்குவங்கி இல்லை என்று ஒற்றை புள்ளியில் அதிமுக லகானை வைத்து பேச்சுவார்த்தையில் இறங்கியதால் பைனலாக 5 என்று முடிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை இலையில் போட்டி?
அதே நேரத்தில் பாஜக தரப்பில் மேலும் 2 கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன. ஒன்று ஏ.சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, மற்றொன்று பாரி வேந்தரின் ஐஜேகே கட்சி. இந்த கட்சிகளுக்கும் சேர்த்து சீட் வழங்குமாறு பாஜக கேட்க... பிடிவாதமாக மறுத்த அதிமுக ஒரு கட்டத்தில் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட... பாஜக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
வேட்பாளர்கள் விவரம்
அதன் பேரிலேயே முதல் 7 தொகுதிகள் என்று வந்த தகவல்... பின்னர் உருமாறி 5 ஆக உருப்பெற்றது. அதே நேரத்தில் அந்த 5 தொகுதிகள் எவை என்றும்... யார் வேட்பாளர்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த தொகுதிகள் இவை தான்... திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 5 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்று கூறப்படுகிறது. யார்... யார் வேட்பாளர்கள் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.
திருச்சியில் தமிழிசை போட்டி?
திருச்சியில் தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்திர ராஜனும், கன்னியாகுமரியில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அதேபோல... மற்ற 3 தொகுதிகள் எவை, வேட்பாளர்கள் யார் என்று விவரங்களும் கசிந்துள்ளன.
திருப்பூர் வானதி, கோவை சிபிஆர்
நெல்லையில் நயினார் நாகேந்திரனும்... திருப்பூரில் வானதி சீனிவாசனும் போட்யிட போகிறார்கள் என்று தகவல்கள் எழுந்துள்ளன. இறுதியாக... பாஜகவுக்கு என்றுமே செல்வாக்கான தொகுதியாக அறிவிக்கப்படும் கோயமுத்தூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், தேசிய கயிறு வாரிய தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
யாருக்கு வெற்றி?
ஜெயலலிதா போன்ற பெரிய தலைமையை இழந்து விட்டு தவிக்கும் அதிமுக, தமிழகத்தில் எப்படியாவது வேரூன்ற வேண்டும் என்று விரும்பும் பாஜக.. என தமிழக அரசியல்களம் பரபரத்து தான் கிடக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த இரு கட்சிகளின் தேவைகளும் நிறைவேறுகிறதா என்று...!!