பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி
சென்னை: தலைநகர் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியானது, கடந்த 75 ஆண்டுகளில் தற்போது பதினாறாவது முறையாக முற்றிலும் வறண்டு போய் காட்சியளிக்கிறது.
சென்னை மக்களின் தாகம் தணிப்பதில் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பருவமழை பொய்த்ததாலும், கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த கொடூர வெயிலினாலும் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி காரணமாக, தமிழகமே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
7 கோடி மக்கள் தொகையில் சுமார் 1 கோடி பேர் வசிக்கும் தலைநகர் சென்னையின் நிலை தான், இருப்பதிலேயே மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் நீர்தேக்கங்களில் ஒன்றான பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
34.98 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட 16 பெரிய மதகுகளை கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடியாகும். கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.1944ம் ஜூன் 14ம் தேதி அப்போதைய சென்னை மேயரான ஆர்தர் ஹோப் பூண்டி நீர்தேக்கத்தை திறந்து வைத்தார்.
கிட்டத்தட்ட பூண்டி ஏரி செயல்பாட்டிற்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பருவமழை பொய்த்ததாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து இல்லாததாலும், பூண்டி ஏரி முற்றிலும் வறண்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், கடந்த 75 ஆண்டுகளில், பூண்டி ஏரியானது 16 ஆண்டுகள் முழு அளவு வறட்சியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் 1948 முதல் 1952 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் பூண்டி ஏரி முற்றிலும் வறட்சியை சந்தித்துள்ளது.
அதன் பின்னர் 1969, 1974, 1983, 1987 ஆண்டுகளிலும் அதன் பிறகு 1991 முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளும், பின்னர் 2000, 2013 என 15 ஆண்டுகள் பூண்டி ஏரி பூஜ்ய நிலை அளவிற்கு வறண்டுள்ளது. தற்போது வறட்சியினால் நடப்பாண்டு 16வது ஆண்டாக முற்றிலும் வறண்டுள்ளது.
முற்றிலும் வறண்டு காணப்படும் பூண்டி ஏரியில் சில இடங்களில் குட்டைபோல நீர் தேங்கியுள்ளது. இதில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுலா தலமான பூண்டி நீர்த்த தேக்கம் வறண்டதோடு மட்டுமல்லாமல் செத்த மீன்களால் நாறி கிடப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது