தலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா?
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை நினைவில்லம் ஆக்குவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், ஜெ.தீபா அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், வேதா நிலையத்தில் கைவைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெ.தீபாவின் ஆதரவாளரும், அவரது கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான ஒருவரிடம் நாம் பேசிய போது, '' ஜெ.தீபா பாவம், அதிமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு ஒரு வருடத்திற்கு மேலாக கெஞ்சியும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவரை சேர்க்கவில்லை. இதனால் நொந்து போன அவர் அரசியலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என கட்சியை கலைத்து விட்டு தனது பணிகளை கவனிக்கத் தொடங்கினார். என்னை போன்ற நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறோம்''.
''இந்நிலையில் இப்போது அம்மாவின் வீட்டை கையகப்படுத்த அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பது ஜெ.தீபாவுக்கு கடும் மன உளைச்சலை தந்துள்ளது. அவர் ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். அம்மா தெய்வமாக அந்த வீட்டில் வாழ்வதாக ஜெ.தீபா கருதுகிறார். இதனால் அந்த வீட்டை காப்பதற்காக அரசியல் ரீதியாக எந்த எல்லைக்கும் செல்ல முடிவெடுத்துள்ளார் தீபா''.
வியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்
''திமுகவின் உதவியை நாட முயற்சித்து வருகிறார். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. தனது அத்தை வீடு பற்றி உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் மக்களின் அனுதாபத்தை நேரடியாக பெற ஜெ.தீபா சிந்தித்து வருகிறார். அம்மா வீடு விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது எனத் தெரியவில்லை, பார்ப்போம்'' என்கிறார்''.