ராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...!
Recommended Video
சென்னை: பாமகவின் கோட்டையாக கருதப்படும் விக்ரவாண்டி தொகுதியில் திமுக எம்.பி.யும், ஒரு காலத்தில் வன்னியர் சங்கம் நடத்தியவருமான ஜெகத்ரட்சகன் புகுந்து விளையாடுகிறார்.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.
2000-ம் ஆண்டு காலகட்டத்தில் வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜெகத்ரட்சகன்.
உள் இட ஒதுக்கீடு
இந்நிலையில், விக்ரவாண்டி தொகுதி திமுக தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக உள்ள ஜெகத்ரட்சகன் பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடும் போட்டி கொடுக்கிறார். கடந்த வாரம் வன்னியர் சமுதாய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு, மறைந்த வன்னிய சங்கத் தலைவர் ஏ.ஜி.கோவிந்தராஜுவுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
ஸ்டாலினுக்கு நன்றி
இதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து விக்ரவாண்டி தொகுதி முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 3 கோடி வன்னியர்களின் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது பாமக தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது.
பாமக பதிலடி
சொந்தப்பணத்தில் ஜெகத்ரட்சகன் போஸ்டர் அடித்து ஒட்டிக்கொண்டு வன்னிய சமுதாய மக்கள் திமுகவுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற மாயயை உருவாக்க பார்ப்பதாக பாமக குற்றஞ்சாட்டுகிறது. மேலும், திமுக என்னதான் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் விக்ரவாண்டியில் அது எடுபடாது என ராமதாஸ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது
மறைமுக நிதியுதவி
போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வீர வன்னியர் பேரவை என்பது ஒரு காலத்தில் ஜெகத்ரட்சகன் நடத்திய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மனக்கசப்பை மறந்து அவர் திமுகவில் இணைந்த பிறகு அந்தப் பேரவை தொடர்பான செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், மறைமுகமாக அதற்கு நிதி உதவி செய்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.