நான் பேரின்பதுரையாவேன்.. அய்யா துரை ஸ்டாலின் அய்யோதுரையாவார்- இன்பதுரை
சென்னை: ராதாபுரம் தேர்தல் வழக்கின் முடிவில் நான் பேரின்பதுரையாவேன் என எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் இன்பதுரை.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இன்பதுரை 69,596 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மறுவாக்கு எண்ணிக்கை
அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட அக்டோபர் 23-ஆம் தேதி வரை தடை விதித்தது.
ராதாபுரம் தொகுதி
இந்த நிலையில் நேற்று அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தலைமையில் 3000 அமமுகவினர் திமுகவில் இணைந்தனர். இந்த விழா நேற்று அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ஸ்டாலின், ராதாபுரம் தொகுதியின் முடிவுகளை என்னால் இப்போதே சொல்ல முடியும் என்றார்.
தலைமை ஆசிரியர்
இதுகுறித்து ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கூறுகையில் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டாம் என கோரி நான் மனு தாக்கல் செய்யவில்லை. 201 தபால் வாக்குகளிலும் ஒரே தலைமை ஆசிரியரே அட்டஸ்டேஷன் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற வழக்கு
இதுகுறித்து உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு வேளை இது தவறு என கூறினால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு அவசியம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் இந்த வழக்கை தொடுத்தேன். தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகும். என்னுடைய வழக்கில் முகாந்திரம் இருப்பதாலேயே எனது வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது.
அய்யாதுரையாக இருந்த ஸ்டாலின்
ராதாபுரம் தேர்தல் வழக்கிற்கு பிறகு இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனக்கு என் தந்தை அழகான தமிழ் பெயரை வைத்தது போல் ஸ்டாலினுக்கு அவரது தந்தை அய்யா துரை என்ற தமிழ் பெயரை வைத்து விட்டு பின்னர் அதை ஸ்டாலின் என மாற்றிவிட்டார் என்பதை கேள்விப்பட்டுள்ளேன்.
அய்யா துரை அய்யோ துரை
ராதாபுரம் தேர்தல் வழக்கில் நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்; வழக்கின் முடிவில் இன்பதுரை பேரின்பதுரையாக வெளிவருவேன். ஆனால் கொளத்தூர் தேர்தல் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வருகிறது. ஒரு வேளை ஸ்டாலினுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் தேர்தலில் 6 மாதம் போட்டியிட முடியாது. எனவே அய்யா துரை அப்போது அய்யோ துரையாகிவிடுவார் என்றார் இன்பதுரை.