விலகி விலகி... அதிமுகவில் அதிகமாக இணைந்து.. தாமரைக்கனி மகன் இன்பத் தமிழன் புதிய சாதனை
அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளார் இன்பத்தமிழன்
சென்னை: அமமுகவில் இருந்து ஒரு விக்கெட் விழுந்துள்ளது. தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன்தான் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. இவரது மோதிர கையினால் குட்டுப்பட்ட எதிர்க்கட்சிகள் ஏராளம்.
காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. விளைவு... மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி. காலத்தின் கோலம்.. தந்தையும் - மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் இறந்துவிட்டார்.
மாவட்ட அதிமுக செயலாளராக இன்பதமிழனை பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. அமைச்சராகவும் நியமித்தார். ஆனால் ஜெயலலிதாவுடன் இன்பத்தமிழனுக்கு அதிருப்தி ஏற்பட்டு, திமுகவுக்கு சென்றார். திமுகவிலும் சரியாக இவர் கவனிக்கப்படாததால், திரும்பவும் அதிமுகவுக்கு வந்தார். ஜெ.மறைவுக்கு பிறகு கட்சியில் செல்வாக்கு இல்லை என்றதும், அமமுகவுக்கு வந்தார். அமமுகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது.
இப்போது தேர்தலில் அமமுக மண்ணை கவ்வியதும், திரும்பவும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்து கொண்டுள்ளார். கூட்டி கழித்து பார்த்தால், இதுவரை அதிமுகவில் அதிகமாக இணைந்த நபர் இன்பதமிழனாகத்தான் இருக்க முடியும்! இதனால், சில சமயம் இவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பது கூட நமக்கு மறந்தே விடுகிறது!