ரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெற்றது. இதையடுத்து, வருமான வரித்துறையின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி, 2002 - 2005 வரையிலான மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது.
கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது இல்லை எனவும், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வருமான வரித் துறை சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து வருமானவரி துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.