வரி பாக்கி.. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் 2007-லேயே முடக்கம்.. ஐடி பரபரப்பு தகவல்
சென்னை: வரி பாக்கி வைத்துள்ளதால் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் கடந்த 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டதாக வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித் துறையின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டது. இதைத் தொடர்ந்து
ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை 2007-ஆம் ஆண்டே முடக்கி வைத்துள்ளோம் என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் இன்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறை தனது பதில் மனுவில் கூறுகையில் ரூ.10.13 கோடி சொத்து வரியும், ரூ. 6.62 கோடி வருமான வரியும் நிலுவையில் உள்ளதால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம், ஹைதராபாத்தில் உள்ள வீடு, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள கடை உள்பட 4 சொத்துகள் 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டுள்ளது.
இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வருமான வரி பாக்கியை யார் செலுத்தப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இது தொடர்பாக 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.