சென்னை தங்க நகை வியாபாரியிடம் ரூ.500 கோடி கணக்கில் வராத சொத்து.. ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னையில் தங்கம் விற்பனை செய்யும் வியாபாரிக்கு சொந்தமான நகை கடை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையில் அவரிடம் கணக்கில் வராத 500 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக வரி செலுத்தாமலும், வரி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நிறுவனங்களிலும், வரி மோசடி குறித்து புகார்கள் வந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
போரூர் டூ பூந்தமல்லி பைப்பாஸ்.. மெட்ரோ பாதை அமைக்க 3 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பு
32 இடங்களில் சோதனை
சென்னை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகைக் கடை வைத்து தமிழகம் முழுவதும் தங்கம் மொத்த விற்பனையில் ஈடுபடும் டீலர் ஒருவருக்கு சொந்தமான 32 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரிசோதனை
அவரது நகைக்கடைகள் மற்றும் அவருக்கு சொந்தமான பங்களா மற்றும் அவர்களுக்கு வணிக தொடர்பு உள்ள இடங்கள் உள்பட சென்னை, மும்பை, கொல்கத்தா, கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள நகைக்கடைகளில் வருமான வரி சோதனை கடந்த 10ம் தேதி நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை
இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இந்த சோதனையில் ரூ.500 கோடி அளவிலான வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கணக்கில் வராத தங்கம்
அவர்கள் கணக்கில் காட்டப்பட்டதைவிட சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 814 கிலோ கூடுதல் தங்கம் இருப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.