கருணாநிதி படங்களை தயாரித்தவர்.. ஜெயமுருகன் மதுபான ஆலைகளில் வருமான வரி ரெய்டு
சென்னை: எஸ்.என்.ஜே. மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.என். ஜெயமுருகனுக்கு சொந்தமான எஸ்.என்.ஜே. மதுபான நிறுவனத்தின் 40 இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் படங்களை தயாரித்தவர் ஜெயமுருகன். 2008ல் திமுக ஆட்சியில் எஸ்.என்.ஜே. நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான், வருமான வரித்துறை சோதனை பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கோவா மாநிலங்களில் உள்ள எஸ்.என்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் இந்த ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர் விவகாரத்தில் திமுக மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட ஜெய முருகனின் மதுபான ஆலையில், வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர்களுக்கு எதிராக வருமான வரித்துறையினர் கடும் கெடுபிடிகளை காட்டுவதாக, சமீப காலமாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. காபி டே உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலைக்கு, வருமான வரித்துறையினரின் கெடுபிடிதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சில காலம் ஓய்ந்திருந்த பெரிய அளவிலான வருமான வரி துறை சோதனை மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.