பணமதிப்பிழப்பின்போது சசிகலா வாங்கிக் குவித்த ரூ 1,674 கோடி சொத்துகளை முடக்க திட்டம்
சென்னை: பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 500, ரூ 1000 நோட்டுக்களை கொண்டு சசிகலா வாங்கி குவித்த ரூ 1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்கு வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சசிகலா சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்கள், பினாமிகள் மூலம் நடந்த பரிவர்த்தனைகளை கண்காணித்து சொத்துக்களை முடக்கும் பணிகளில் வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது.
2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, அதாவது பண மதிப்பிழப்பின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு அந்த பணத்தை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் 1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
இது கடந்த 2017ஆம் ஆண்டு அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
சென்னை, கோவை, காஞ்சிபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் ரூ.1,674 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சொத்துகளை முடக்குவதற்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.