3வது நாளாக ஐடி ரெய்டு.. கனடாவில் உள்ள பால் தினகரன், குடும்பத்தினரை அழைத்து விசாரிக்க திட்டம்?
சென்னை: பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 3ஆவது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. கனடாவில் தங்கி உள்ள பால் தினகரன் மற்றும் குடும்பத்தினரை அழைத்து விசாரிக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video
பிரபல கிறிஸ்தவ மத போதகரான டி.ஜி.எஸ்.தினகரன், கடந்த 1983ம் ஆண்டு 'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டங்கள் நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து 1986ம் ஆண்டு முதல் கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி தொடங்கி நடத்தி வந்தார். இவரது பிரசார கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் புகழ் பெற்ற மத போதகராக டி.ஜி.எஸ்.தினகரன் திகழ்ந்து வந்தார்.
பின்னர் கடந்த 2008ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் தினகரன் தனது தந்தை நடத்திய 'இயேசு அழைக்கிறார்' குழுமம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தை தற்போது வழிநடத்தி வருகிறார்.
பால் தினகரன்
பால் தினகரன் நடத்தும் குழுமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதி வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நிதிக்கு முறையாக மத்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை என புகார்கள் வந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி காலை 8 மணிக்கு 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து ஒரே நேரத்தில் பால் தினகரன் நடத்தும் சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட 'இயேசு அழைக்கிறார்' பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
எங்கெல்லாம் நடந்தது
கோவையில் பால் தினகரனின் கல்லூரி, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் பால் தினகரனுக்கு சிறுவாணி ரோடு காருண்யா நகரில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், வீடு, அலுவலகம், ஜெபக்கூடம், ரிசார்ட்ஸ் போன்றவற்றிலும் சோதனைகள் நடந்து வருகிறது. புலியகுளம் பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்துவ பள்ளியிலும், அவினாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபக்கூடத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை காரணமாக காருண்யா குழும கல்லூரி, பல்கலைக்கழகம், அலுவலக வளாகத்தில் வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சோதனை முடிய வேண்டும்
இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் 3ஆவது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின் போது, இயேசு அழைக்கிறார் குழுமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், வங்கி தொடர்பான ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் சோதனை முடிந்த பிறகே அது பற்றி தெரிவிக்க முடியும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அழைத்து விசாரிக்க திட்டம்
வருமானவரித்துறையினர் சோதனையின் போது பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் இருப்பது தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பால் தினகரனை சென்னைக்கு வரவழைத்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.