800 கோடி வரி ஏய்ப்பு...கட்டுக்கட்டாக சிக்கிய 8 கோடி ரொக்கம்..முடிவுக்கு வந்த வி.வி.மினரல் ஐடிரெய்டு!
சென்னை : வி.வி.மினரல் குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுமம் ரூ. 800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதில் குறிப்பாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ.2.5 கோடி நிதி அளித்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 நாட்களாக வி.வி மினரல்ஸ் குழுமத்தில் நடந்து வந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்துள்ளது. வி.வி.குழுமத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த குழுமத்தின் நிறுவனர் வைகுண்டராஜன் மற்றும் அவரது மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
6 நாட்கள் சோதனையில் வி.வி.மினரல்ஸ் குழுமம் ரூ. 800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதே போன்று கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி கட்டுக்கட்டான பணத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வி.வி.மினரல்ஸ் குழுமத்தினர் வெளிநாடுகளில் 8 சுரங்கங்களை நடத்தி வருவதும் அம்பலமாகியுள்ளது. மேலும் போலி நிறுவனங்கள் மூலம் பல கோடிகளை வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனையை இவர்கள் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் வைகுண்டராஜனின் மகன்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ.2.5 கோடி பணம் கொடுத்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையில் எப்படி இந்தப் பணப்பரிமாற்றம் நடந்தது என்று வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
எந்த நோக்கத்தில் டிடிவி. தினகரனுக்கு ரூ. 2.5 கோடி பணம் கொடுக்கப்பட்டது, அதற்கான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. சவுதி நாடுகளில் நடத்திய 8 குவாரிகள் மூலம் கிடைத்த வருமானத்திற்கு வரி கட்டப்பட்டுள்ளதா அந்த தொகை எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் இல்லாததால் வருமான வரி சோதனை முடிந்தாலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.