எந்த முகத்தை வைத்து கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்போம்.? ராஜேந்திர பாலாஜி புலம்பல்
Recommended Video
சென்னை: அதிமுக-விற்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து பார்த்தால் கோஷ்டி பூசல் இருப்பது போல தெரியும். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை என கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர் யாரேனும் ஒருவருக்கு இடம் கொடுத்திருக்கலாமே என கேள்விகள் எழுப்புகின்றன.
மேலும் தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் பாஜக இறங்கிவிட்டதாக குற்றம்சாட்டுகின்றன. நாங்கள் பிரதமர் மோடியை நாட்டின் காவலாளி என்று கூறி வருகிறோம். ஆனால் எதிர்கட்சிகள் அவரை களவாணி என்று மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மக்களின் மனதில் இப்படி நஞ்சை கலந்து மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு, எந்த முகத்தை வைத்து கொண்டு எங்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் தாருங்கள் என கேட்க முடியும் என வினவினார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாவிட்டாலும் கூட, தமிழகத்திற்காக மத்திய அரசிடம் பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்,.
அந்த வகையில் கோதவாரி - கிருஷ்ணா காவிரி நதி நீர் இணைப்பு பற்றிய திட்டம் குறித்து, மத்திய அரசிடம் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அண்மை ஆண்டுகளாக தமிழகத்தில் கலாச்சாரம் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.
அது எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்பது தான். திட்டங்களின் நோக்கம் என்னவென்று முழுதாக அறியாமல், திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது என சிலர் எதிர்க்க துவங்கி விடுகின்றனர். எனவே அரசு நிறைவேற்ற நினைக்கும் திட்டங்களை மக்களின் எதிர்ப்பு மற்றும் சட்டப் பிரச்சனைகளை சந்தித்து, பின்னர் தான் செயல்படுத்த கூடிய சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்தார்.
அதிமுக-வில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாகவே அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கருத்து கூறியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பது போல தெரியும். ஆனால் உண்மையில் அது மாதிரி எதுவும் கிடையாது.
அதிமுகவிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிற்போம். காங்கிரஸ் கட்சிக்குள் தான் கோஷ்டி பூசல் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும் என்றார். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இந்தி மொழி திணிப்பு பற்றி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திறமை உள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம். எல்லா மொழியையும் படிப்பது நன்மை தான். ஆனால் தாய்மொழியை நேசிக்க வேண்டும் என்றார்.