விலங்குகள் கடத்தலில் வர்த்தக மையமாக திகழும் சென்னை.. படித்த இளைஞர்கள் தொழிலில் ஈடுபடும் அவலம்
சென்னை: இந்தியாவிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்கு கடல் அட்டை, நட்சத்திர ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதற்கு சென்னை நகரம் வர்த்தக மையமாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கடல்வாழ் உயிரினங்கள் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கிழக்காசிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. வனவிலங்குகள் கடத்தல் தடுப்பு பிரிவில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையே, இந்த கடத்தலை தடுக்க முடியாததற்கு காரணம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் கடத்தல் நடந்தாலும் அதனை தடுக்க ஒரே குழுவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் அதாவது ராமேஸ்வரம் ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் நடந்தாலும் ஒரே குழுவினர் தான் சென்று ஆய்வு செய்யும் நிலை உள்ளது.
கிளி, கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி காசு பார்க்கும் கூட்டத்தில், பெரும்பாலும் படித்த இளைஞர்களே இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டதன் காரணமாக, நன்றாக படித்தவர்களே ரூ500 முதல் ரூ10,000 பணத்திற்காக இவ்வேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதுமாதிரி கடல்வாழ் உயிரினங்களை கடத்தினால் குற்றம் இதற்கு சிறை தண்டனை உண்டு என்ற விழிப்புணர்வு கூட இளைஞர்களிடம் இல்லை. ஒரு கிலோ எறும்புதின்னி 60 ஆயிரம் ரூபாய், நட்சத்திர ஆமை இருபதாயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் உயிரி கடத்தல் ஜரூராக நடைபெற்று வருகிறது.
உயிரினங்கள் எங்கிருந்து கடத்தப்படுகிறதோ அங்கேயே கடத்தல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விமான நிலையங்களில் வைத்து பிடிப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்
கிழக்காசிய நாடுகளில் இருந்து பச்சை தவளைகள், கட்டு வீரியன் பாம்புகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு கடத்திவரப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. வனவிலங்கு கடத்தல் தடுப்பு பிரிவில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, இது மாதிரியான கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.