ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..!
சென்னை: அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் ஓ.பி.எஸ்.தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.
ஓ.பி.எஸ். அணியில் இருந்த பலரும் இப்போது அவரை விட்டு விலகிச்செல்வதற்கு காரணம், தன்னை நம்பி வந்தவர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதே ஆகும்.
ஆனால் அதே வேளையில் கிளைக்கழக நிர்வாகிகள் தொடங்கி மாநில அளவிலான நிர்வாகிகள் வரை அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தட்டாமல் செய்துகொடுத்து தனக்கான இமேஜை உயர்த்திக்கொண்டார் முதல்வர் இ.பி.எஸ்.
சசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி
ஆட்டம் கண்ட ஆட்சி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தம் காரணமாக அதிமுக ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. இன்று எந்த ஆட்சியில் துணை முதலமைச்சராக இருக்கிறாரோ அதே ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்து ஜெயலலிதா உருவாக்கிய அரசை வீட்டுக்கு அனுப்ப அரும்பாடு பாட்டார் ஓ.பி.எஸ். இருப்பினும் சசிகலாவின் தேர்வான இ.பி.எஸ்., நெருக்கடியான காலகட்டத்தை சமயோஜிதமாக சமாளித்து மூன்று மாதங்கள் கூட தாக்குபிடிக்கமாட்டார் என எண்ணியவர்கள் மத்தியில் நான்காண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டார்.
ஆதரவாளர்கள் விலகல்
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு முதல் ஆதரவு கொடுத்த எம்.பி. லட்சுமணன் இப்போது திமுகவுக்கு சென்றுவிட்டார். அதேபோல் அவரது பக்கம் நின்ற நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி போன்றோர் கூட இப்போது இ.பி.எஸ். பக்கம் தங்கள் ஜாகையை மாற்றத் தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் கட்சி ரீதியாகவும் சரி, ஆட்சி ரீதியாகவும் சரி தன்னை நம்பி வந்தவர்களுக்கு இதுவரை ஓ.பி.எஸ். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்பதே.
நிர்வாகிகள் கோரிக்கை
ஆனால் அதேவேளையில் கட்சியினர் தன்னிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை தட்டாமல் செய்துகொடுத்து தனக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை படிப்படியாக விரிவாக்கிக் கொண்டார் இ.பி.எஸ். தற்போதும் அவருக்கு டி.டி.வி.தினகரன் மீது தான் வருத்தம் உள்ளதே தவிர சசிகலா மீது பெரியளவில் வருத்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த நான்காண்டுகளில் சசிகலாவை பற்றி அவர் எந்த இடத்திலும் சிறு விமர்சனம் கூட செய்ததில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிமுகவில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் கூட இ.பி.எஸ். பக்கம் நிற்கத்தொடங்கி விட்டார்கள் போல் தெரிகிறது.
பரபரக்கும் அதிமுக
இதனிடையே நாளை நடைபெறும் அதிமுக செயற்குழுவில் கட்சி-ஆட்சி என இரண்டு விவகாரங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கும் எனத் தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு செயற்குழு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் இ.பி.எஸ். ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.