கடந்த சில நாட்களாக வீசும் பலத்த காற்று.. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் காற்றின் வேகம் கடந்த ஒருவார காலமாக அதிகரித்து காணப்படுவதால், காற்றாலை மூலம் செய்யப்படும் மின்னுற்பத்தி அளவும் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கோடை காலம் தமிழகத்தில் நிலவி வந்தது.கடந்த 1 வாரமாக தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சற்று தணிந்தது. அவப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்நுகர்வு உள்ளது. ஆனால் இதற்கு இணையான மின்உற்பத்தி என்ற நிறைவு நிலையை எட்ட முடியாத சூழல் தொடர்ந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, நீர்நிலைகள் அனைத்தும் முற்றிலும் வறண்டு விட்டதால், அவைகளில் இருந்து மின்னுற்பத்தி நடைபெறவில்லை. அதே நேத்தில் தமிழகத்தை பொருத்த வரை கோடைகாலம் இன்னும் முழுமையாக முடியாததால், மின்சாரம் அதிகளவில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக காற்றாலை மின்னுற்பத்தி கைகொடுக்காத நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவக்காற்று வீசத்துவங்கியுள்ளது. இதனால் தற்போது காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் சுமார் 7,913 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த சில நாட்களாக சராசரியாக 2,000 முதல் 3,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பலத்த காற்று வீசி வருகிறது. ஆடி மாதம் துவங்க இன்னும் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், காற்றின் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.
இதனால் காற்றாலை மின்னுற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக காற்றாலை மின்னுற்பத்தி 4,591 மெகாவாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காற்று அதிகமாக உள்ளதால் சராசரியாக ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் நாளொன்றுக்கு 25 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்தால், அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 40,000 ஆயிரம் யூனிட் வரை ஒரு காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக காற்றாலை நிறுவனங்கள் கூறியுள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர்ந்தால் அதனை தமிழக மின்வாரியம் முழுமையாக கொள்முதல் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.