அதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: இந்தியாவில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவது பற்றி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த புள்ளி விவரங்கள் தேசிய அளவில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையே உணர்த்துவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படுவது லான்செட். இந்த இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38% அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது.
குட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்
2017-ம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் மதுநுகர்வு மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட அதிக வருமானம் கொண்ட நாடுகளில் தான் மதுநுகர்வு அதிகமாக இருந்தது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் மதுவின் பயன்பாடு குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
சீனாவின் மதுநுகர்வு 4.22% மட்டும் தான் உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மது அரக்கன் விசுவரூபம் எடுத்திருக்கிறான். இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை. உலகின் பெரும்பான்மையான நாடுகளில் மதுநுகர்வு குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் மதுநுகர்வு கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.
மது மிகவும் ஆபத்தானது; சமூகத்திற்கு எதிரானது என்ற உண்மை அனைவரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் தீவிரமாக செய்ய வேண்டும். மத்தியில் மீண்டும் அமையவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இவற்றை மீண்டும் வலியுறுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பாமக நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.