கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்கள்.. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.. வியக்கத்தகு இந்தியா!
- வருணி
டெல்லி: கொட்டிக் கிடக்கும் வளங்களுடன் கூடிய பொக்கிஷ நாடு நமது இந்தியா.. இதன் வளத்திற்கு ஈடு இணையே கிடையாது. அத்தகையக வனப்பு மிக்க இந்தியாவின் வளமையைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
நம் இந்திய நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி சென்ற கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியை இக்கட்டுரையிலும் காண்போம்.
இந்தியாவின் மிகப் பெரிய செயற்கைத் தீவு:
கேரளாவின் கொச்சி நகரத்தில் உள்ள 'வில்லிங்டன் தீவு' இந்தியாவின் மிகப் பெரிய செயற்கைத் தீவாகக் கருதப்படுகிறது. வைசிராயும், இந்தியத் தலைமை ஆளுநருமாக இருந்த வில்லிங்டன் பிரபு அவர்களின் பெயரால் இத்தீவு அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம்:
இந்தியத் தலைநகர் தில்லியில் உருவாக்கப்பட்டுள்ள 61 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'மில்லேனியம் பார்க்' பேருந்து நிலையம் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையமாகக் கருதப்படுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தலாம். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்' முன்னதாக ( சென்னை புறநகர் பேருந்து நிலையம்) ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையமாக அறியப்படுகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம்:
தலைநகர் தில்லியில் 5220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்' இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக அறியப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடி மிக்க விமான நிலையமாக அறியப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய காற்றாலை பண்ணை:
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 'முப்பந்தல் காற்றாலை' பண்ணை இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை பண்ணையாகும். இக்காற்றாலை 1,500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது.
இந்தியாவின் மிகப் நீளமான சுரங்கப்பாதை:
ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் செனானி மற்றும் நஷ்ரி இடையே அமைக்கப்பட்டுள்ள 9.28 கி.மீ. தூரம் உள்ள சுரங்கப்பாதை இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையாகும்.
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. எத்தனை எத்தனை... வியக்கத்தகு இந்தியா!
இந்தியாவின் மிக நீளமான ரயில் மேம்பாலம்:
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 'போகிபீல் மேம்பாலம்' இந்தியாவின் நீளமான ரயில் மேம்பாலமாகும். இதன் நீளம் 4.9 கி.மீ. தூரமாகும்.
இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்:
அசாம் மாநில திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி வரை பயணிக்கும் 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் இரயிலாகும். இந்த இரயில் 4,273 கி.மீ. தூரம் பயனிக்கிறது. மேலும் அதிக நாட்கள் பயனிக்கும் ரயில் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் மிக நீளமான கடற்கரை:
தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில் அமைந்துள்ள 'மெரீனா கடற்கரை' இந்தியாவின் மிக நீளமான கடற்கரையாகும். இது இந்தியாவின் மிக கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ளது. இதன் நீளம் 13 கி.மீ தூரமாகும். மேலும் இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (சோலார் பார்க்):
கர்நாடகா மாநிலம் தும்கூரில் அமைந்துள்ள 'பவகடா சோலார் பார்க்' இந்தியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக அறியப்படுகிறது. 13,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா துவக்கத்தில் 2,000 மெகாவாட் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு பின்னர் 50 மெகாவாட் சேர்க்கப்பட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய கோவில்:
தமிழ்நாட்டின் திருவாரூரில் 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'தியாகராஜர் கோயவில்' இந்தியாவின் மிகப் பெரிய கோவிலாகும். இக்கோவிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் ( இந்த லிங்கங்கள் வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாகக் கூறப்படுகிறது). மேலும் 100 க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 க்கும் மேற்பட்ட உள் கோயில்களைப் பெற்று பிரமாண்டமாகத் திகழ்கின்றது.
மேலும் சில பொக்கிஷங்களைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் காண்போம்.