இஸ்லாம் குறித்து அநாகரீக பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாமியார் சிவகுமார்.. சிறையில் அடைப்பு
சென்னை: இந்துக்களின் மந்திரமான திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தை தவறாக சித்தரித்து சர்ச்சையில் சிக்கி கைதான சாமியார் சிவக்குமார், சிறையில் இருந்த வந்த பின்னர் இஸ்லாம் மதம் பற்றி சர்ச்சையாக பேசினார். இதையடுத்து அவரை கைது செய்த புழல் போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர்.
சென்னை புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் வசிக்கும் சிவக்குமார்(48) "யோகா குடில்" என்ற பெயரில் அங்கு ஆசிரமம் நடத்தி வருகிறார்.
கடந்த 5 மாதத்திற்கு முன்னர் சிவக்குமார் இந்துக்களின் மந்திரமான திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தை தவறாக சித்தரித்து அவதூறாக பதிவிட்டிருந்தார்.
'ஏமாற்றுவது, கட்சி மாறுவது எல்லாம் அரசியலில் சாகஜமப்பா..' காங்கிரசின் டி.கே சிவக்குமார் பளீச்
சிவாச்சாரியார்
இந்த அவதூறு கருத்துக்களால் அதிர்ச்சியடைந்த சிவாச்சாரியர்கள் தமிழகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் சிவக்குமார் மீது புகார் அளித்தனர். பின்னர், அனைத்து சிவாச்சாரியார்களும் அப்போது புழல் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிவகுமாரை கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இஸ்லாமியர்கள் கோபம்
இந்நிலையில், சிறையில் சில காலம் இருந்துவிட்டு வெளிவந்த சிவகுமார் , இந்த முறை இஸ்லாம் மதம் பற்றி அவதூறாக யூடியூப் சேனலில் பேசியுள்ளார். கடந்த வாரம் இவர் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர்கள் பலர் யோகாகுடில் நடத்தும் சிவக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்நிலையில் புழல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சிவக்குமாரை கைது செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம், சாமியார் சிவக்குமாரை பிடிக்க உத்தரவிட்டார். அதனையடுத்து, புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் போலீசார், புத்தகரத்தில் உள்ள யோக குடிலுக்குச் சென்று சாமியார் சிவகுமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திவிட்டு, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சாமியார் சிவக்குமாரை பொன்னேரி சிறையில் அடைத்தனர்.
இழிவான பேச்சு
இதனிடையே இஸ்லாமியர்கள் பற்றி அநாகரீகமாக பேசிய சிவகுமாரை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், யோகா குடில் சிவகுமார் என்ற நபர் பொதுவெளியிலும், வலைதள பதிவுகளிலும் இழிவான ஆபாச வார்த்தைகளை பேசி வன்மையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
கடும் நடவடிக்கை
மேலும் சிவகுமார் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துக்களை வெளியிடுகிற சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கே.எஸ்.அழகிரி அந்தத அறிக்கையில் கூறியுள்ளார்.