நேதாஜி பாதை.. செங்கோட்டையில் கொடியேற்றி நேரு சொன்ன அந்த "முதல்" வார்த்தை.. அதிர்ந்த செங்கோட்டை
சென்னை: சுதந்திர கொடி இப்போது தலைநகரில் ஒய்யாரமாக பறந்து கொண்டிருக்கின்றது.. ஆனால், 1947, ஆகஸ்ட் 15.... இதே நாள்.. அன்றைய தினம் எப்படி இருந்தது தெரியுமா?
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை... ஆனாலும் தலைநகரில் நம் மக்களின் கொண்டாட்ட முழக்கம் கணீர் கணீரென்றிருந்தது.
ஆகஸ்டு 15 சுதந்திரம் தரலாம் என அறிவிக்கப்பட்டவுடனேயே நம்ம ஜோதிடர்கள் கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். "இன்னைக்கு நாள் சரியில்லை... அதனால 2 நாள் கழிச்சி சுதந்திரம் கொடுக்கலாமே" என தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தியாகிகள் பென்ஷன்... ரூ. 16000த்தில் இருந்து ரூ. 17000ஆக உயர்வு... முதல்வர் உத்தரவு!!
நடுராத்திரி
ஆனால் இதெல்லாம் பிரிட்டிஷ்காரர்களிடம் எடுபடுமா என்ன? அவர்களது கணக்குப்படி நடுராத்திரி 12 மணி என்பது புதிய நாள் தொடங்குவதாக கணக்கு... ஆனால் நமக்கு அப்படி இல்லை.. 5 மணிக்கு கோழி கூவினால்தான் அதாவது புதிய நாள் என்று அர்த்தம். ஜோதிடர் சொல்வதையெல்லாம் காதிலே வாங்காத மவுண்ட்பேட்டன் ஆக.15 என்பதிலே விடாப்பிடியாக இருந்தார்.
நேதாஜி
முதல் வேலையாக, நேரு தலைமையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அனைவராலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது... "நம் தேசத்தை காப்போம், இந்திய மக்கள் நலனுக்காக பாடுபடுவோம்" என நேரு சொல்ல சொல்ல அனைவரும் அதையே திருப்பி திருப்பி சபதம்போட்டு சொன்னார்களாம். ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வை தட்டியெழுப்பும் நேதாஜியின் ஒற்றை சொல்லான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் தன் முதல் சுதந்திர உரையை துவங்கினார் ஜவஹர்லால் நேரு.
முரண்பாடுகள்
நேதாஜிக்கும் - நேருவுக்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் சரி, கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் சரி, வெவ்வெறு நிலைகளில் நின்று போராட்டத்தை கையில் எடுத்தவர்கள்தான்... ஆனாலும் நேதாஜியின் அந்த ஒற்றை சொல் முழக்கம் பாரதத்திற்கு புத்தொளியும், புத்துயிரும் ஊட்டியது என்பதை காலம் நிரூபித்து கொண்டே இருக்கிறது.. நேருதான் தன் சுதந்திர முதல் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை துவக்கி வைத்தார்.
என் நாடு
தேசத்தின் பல்வேறு கிராமங்களில் பெரும்பாலானோர் கதர் ஆடை அணிந்து கொண்டனர்.. எல்லோருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.. அதேபோல அன்றைய தினம் நம் தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கதர் குல்லா இலவசமாக வழங்கப்பட்டு, இனிப்பும் வழங்கப்பட்டதாம்... அன்றைய நாள், ஒவ்வொருவரும் வீதிகளில் நடைபோட்டபோது, "இந்தியன்" என்ற உணர்வும், "என் நாடு" என்ற இறுமாப்பும் கலந்த சந்தோஷம் அவர்களின் முகங்களில் பளிச்சிட்டது!
தேசிய கொடி
இப்போது அதே சந்தோஷமும், இறுமாப்பும் நம்மிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. இன்னொரு சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கம் ஆங்காங்கே ஒலித்து கொண்டிருந்தாலும், பாரத தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி பளிச்சென கம்பீரமாக பறந்து கொண்டே இருக்கிறது!