குடும்ப செலவுக்கு அனுப்பியது ரூ.50.. 10 ரூபாய் மிச்சப்படுத்திய மனைவி.. சாஸ்திரி செய்த 'நச்' காரியம்!
சென்னை: மிகவும் ஏழ்மை பின்னணி கொண்ட முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்ப செலவுக்கு 50 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 10 ரூபாய் மிச்சம் இருப்பதாக அவரது மனைவி அவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து சாஸ்திரி தனது குடும்பத்திற்கு மாதம் 40 ரூபாய் போதும் என்றும், மீதி பணத்தை உதவி தேவைப்படுவோருக்கு கொடுங்கள் என்று உடனே இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த பல்வேறு தலைவர்கள் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்து வந்தவர்கள் ஆவார். லால் பகதூர் சாஸ்திரி, கமாராஜர் உள்பட எண்ணற்ற தலைவர்களை இந்த வரிசையில் சொல்லலாம்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, குடும்பத்தை காப்பாற்றுவதைவிட நாட்டை காப்பாற்றுவது தான் மிக முக்கியம் என்று போராடிய தலைவர்கள் எத்தனை எத்தனையோ பேர் உள்ளனர். சுதந்திர போராட்டத்தில் மக்களை வழிநடத்தும் தளபதிகளாக விளங்கிய பலரது குடும்பம் அப்போது மிகவும் வறுமையில் தான் வாடியது.
காந்தி ஏன் பிரதமராக நேருவை முன்மொழிந்தார்?.. படேலுக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு எப்படி?
நிதி உதவி அளிக்க அமைப்பு
இதனால் விடுதலை போராட்ட சமயத்தில் ஏழை எளிய பின்னணியில் இருந்து வந்து பங்கேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, லாலா லஜ்பத் ராய், இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பை (Servants of India Society) ஏற்படுத்தினார். இந்த அமைப்பில் நிதி உதவி பெற்றவர் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
சாஸ்திரி குடும்பம்
இவர் குடும்பம் எந்த அளவிற்கு வறுமையானது என்பதை இப்போது பார்ப்போம். ஒரு சமயம் லால் பகதூர் சாஸ்திரி சுதந்திர போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். இந்த சூழலில் சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பு 50 ரூபாய் வழங்கியது. சிறையில் இருந்த சாஸ்திரி தனது மனைவிக்கு அப்போது எழுதிய கடிதம் ஒன்றில் உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை பராமரிக்க முடிகிறதா என்று கேட்டிருக்கிறார்.
40 ரூபாய் போதும்
கணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் அளித்த லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச்செலவுக்கு போதுமானதாக உள்ளது. 40 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக் கொள்கிறேன். மாதம் 10 ரூபாய் சேமிக்க முடிகிறது என்று கூறியிருக்கிறார். மனைவியின் இந்த கடிதத்தை பார்த்த சாஸ்திரி உடனடியாக இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தனது கடிதத்தில், என் குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.
சாஸ்திரி கார்
சாஸ்திரியை பற்றி இன்னொரு தகவலையும் இப்போது பார்ப்போம். நம் நாட்டின் பிரதமராகும் வரை லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்த வீடு மட்டுமல்ல, சொந்தமாக காரும் கிடையாது. நாட்டின் பிரதமரானதால், கார் வாங்குங்கள் அப்பா என்று அவரது பிள்ளைகள் கேட்டனர். இதையடுத்து கார் வாங்க முடிவெடுத்தார் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
கடன் வாங்கி கார்
சாஸ்திரி நேராக கார் ஸோருமுக்கு சென்றார். அப்போதைய காலக்கட்த்தில் பியட் கார் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அவரது வங்கிக்கணக்கில் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. வங்கியில் இருந்து கடன் வாங்கி கார் வாங்கினார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அந்த காரை வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் முன் லால் பகதூர் சாஸ்திரி தாஸ்கண்டில் அகால மரணம் அடைந்தார்.
அகால மரணம்
பாகிஸ்தானுடன் 1965ம் ஆண்டு போர் நடந்த நிலையில், 1966 ஜனவரி 11-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது ஆயுப் கானும் பங்கேற்றார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த சில மணி நேரத்தில் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஓய்வூதியத்தில் கடன் அடைப்பு
இதனிடையே சாஸ்திரியின் மறைவுக்கு பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். எனினும் வங்கி கடனை தள்ளுபடி செய்வதை மறுத்த அவரது மனைவி லலிதா சாஸ்திரி தனது ஓய்வூதியத்தில் இருந்து கடனை அடைத்தார்.