இந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா?
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின் பிங் வந்தார், பிரதமர் மோடியும் தமிழகம் வந்தார். இருவரும் மாமல்லபுரத்தை சுற்றிபார்த்தார்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருவரும் இளநீர் குடித்தார்கள். நடனம் பார்த்தார்கள். மோடி டூரிஸ்ட் கைடு போல் அவருக்கு மாமல்லபுரத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார் என எப்படி வேண்டுமானாலும் செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி முக்கிய செய்தி என்றால் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, ராஜாங்க ரீதியான உறவுகளை பற்றி இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான். இதனால் என்ன பயன் இந்தியாவுக்கு கிடைத்தது. சீனாவுக்கு என்ன கிடைத்தது என்பதெல்லாம் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
இதைப்பற்றி குறிப்பிடக் காரணம் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை என்பது மிகவும் கவலைக்கிடமாக இருப்பது ஊரறிந்த உண்மை. இதற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரியை வியாபாரிகள் சொல்லிக்கொண்டாலும், நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. எல்லாவற்றையும் உற்பத்தி செய்யாமல், இறக்குமதி செய்தால் பணம் வெளியேதான் போகும். இப்படித்தான் நம் பணம் பெரும்பாலும் சீனாவுக்கு போய்கொண்டிருக்கிறது.
வந்தது 54 ஆயிரம் கோடி
இந்தியாவை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பது தெரியாது. ஆனால் சீன வியாபாரிகள் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள். அதாவது பணம் காய்க்கும் மரமாக பார்க்கிறார்கள். இந்த ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் சீனா ஏற்றுமதி மூலம் இந்தியாவிடம் இருந்து பெற்ற தொகையின் மதிப்பு 2லட்சத்து 72 ஆயிரத்து 52 கோடியாகும். அதேநேரம் இந்தியா அனுப்பிய ஏற்றுமதி என்பது 54 ஆயிரத்து 708 ரூபாய் கோடியாகும். இதன் மூலம் ஏற்றுமதியில் சீனா நம்மிடம் இருந்து நான்கு மடங்கு பணத்தை வாங்குகிறது என்பது தெளிவாக தெரியும்.
விலை குறைவு
இந்தியாவுக்கு சீனா மின்னணு சாதன பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் உரங்கள்.போன்றவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு டூப்ளிகேட் போடுவதில் கெட்டிக்கார நாடான சீனா நம் இந்திய சந்தையை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. விலை குறைவு என்ற ஒற்றை தாரகம மந்திரத்தால் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறி உள்ளது. இந்தியர்களும் அதிகமாக வாங்குவதால் இந்திய சந்தையை கைப்பற்றி விட்டது.
உருவாக்குவது எளிதல்ல
ஆனால் எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் இந்தியாவில் வேலை இழப்பு என்பது பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டாலும் நமக்கு வேண்டியதை நாமே தயாரித்துக்கொண்டோமே ஆனால் இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஏற்படாது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படியான சூழலை இங்கு உருவாக்குது என்பது எளிதல்ல. அதற்கு எல்லோரும் இந்தியாவில் தயாரித்த பொருட்களையே வாங்குவோம் என்று உறுதி எடுத்தால் தான் சாத்தியம்.
திராட்சை- சர்க்கரை-கறி
சரி சீனாவுக்கு நாம் என்ன அனுப்புகிறோம் என்பது தெரியுமா.. வந்தவருக்கு வயிறாரா சாப்பாடு போடும் நம் மக்கள், உணவு பொருட்களைத்தான் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறார்கள். நம் உணவுகளை, விளைபொருட்ககளை நம்மிடம் இருந்து சீனா விரும்பி வாங்குகிறது. நம்மூரில் விளையும் திராட்சை முதல் ஐந்து மாதத்தில் 13.26 மில்லியன் டாலருக்கு சீனாவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. சர்க்கரை 7.77 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. குறிப்பாக காபி, டீ, கறி மற்றும் மசாலா பொருட்களை 168.42 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதேபோல் மீன் ஏற்றுமதியும் சீனாவுக்கு அதிக அளவு ஆகியுள்ளது.
செல்போன் ஏற்றுமதி
இப்படி சாப்பிடும் பொருட்கள் எல்லாமே நம்மிடம் இருந்துதான் சீனாவுக்கு அதிகமாக செல்கிறது. ஆனால் அவர்கள் சாப்பாட்டை தவிர சாப்பாட்டை விளைவிக்க தேவையான உரம் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் மின்சார சாதன பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். குறிப்பாக செல்போன் ஏற்றுமதி நிச்சயம் தாறுமாறுதான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உலக நாடுகளில் இந்தியா இறக்குமதி அதிகம் செய்யும் நாடு என்றால் அது சீனாதான்.
இந்திய பொருட்களை வாங்குவோம்
ஏற்றுமதி இறக்குமதி எல்லாவற்றையும் கழித்தது போக இந்தியாவில் இருந்து சீனாவுக்கும் இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதத்தில் வெளியேறிய தொகை இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். சீனா மட்டுமல்ல, ஒவ்வொரு நாடுமே இந்தியாவை சந்தையாகவே பயன்படுத்துகின்றன. இந்தியா சந்தையாக பயன்படுத்தும் நாடு என்றால் உடனே சொல்வதென்றால் அதுஅமெரிக்கா தான். எனவே நாம் இறக்குமதியை குறைக்க இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களையே வாங்குவோம் என்று கொள்கைக்கு நாம் மாற வேண்டும். அப்படி மாறினால் மட்டுமே நம் நாடு நலம் பெறும். இல்லாவிட்டால் வேலை போச்சு, பணம் போச்சு.. வியாபாரம் இல்லை என்று புலம்ப வேண்டியதுதான்..