சீன பொருளை வாங்க கூடாது.. ராஜா ட்வீட்.. " படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா" ட்விட்டர்வாசிகள் நறுக்
சீன பொருட்களை நாம் வாங்க கூடாது என எச். ராஜா தெரிவித்துள்ளார்
சென்னை: சீன பொருட்களை நாம் இனிமேல் பயன்படுத்தக்கூடாது என்று எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.. இதற்கு "சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே ? அதை இந்தியாவில் செய்து இருக்க முடியாதா ? சீனாவில் இருந்து வந்த சர்தார் வல்லபாய் சிலை சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுமா? நம் பணம் நமக்கு திரும்ப கிடைக்குமா" என்றும் ட்விட்டர்வாசிகள் எச்.ராஜாவிடம் கேள்விகளை எழுப்பி கொண்டுள்ளனர்.
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் ராணுவ வீரர்களுக்கு இடையிலான ஏற்பட்ட மோதல் பதற்றத்தை தந்து வருகிறது.
20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது... 4 பேர் உயிர் ஊசல் என்கிறார்கள்.. அதேபோல் சீன தரப்பிலும் 43 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது... ஆனால் இதை பற்றி சீனா அதிகாரபூர்வமான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இந்தியாவைவிட அதிக உயிரிழப்புகள் தங்களுக்குதான் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன
20 உயிர்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது இந்திய மக்களை கொதிப்படைய வைத்து வருகிறது.. சீனாவின் முக்கிய வர்த்தக சந்தையாக இந்தியா உள்ளது.. எவ்வளவோ லாபங்களை அனுபவித்து வருகிறது.. அப்படி இருந்தும் தேவையில்லாமல் இந்தியாவை பகைத்து கொண்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது.
இந்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் நோக்கர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல, சீன பொருட்களை இனிமேல் நாம் வாங்க கூடாது என்றும் சோஷியல் மீடியாவில் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவின் தேசிய செயலாளரும் மூத்த தலைவருமான எச்.ராஜாவும் கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இனியும் சீனாவை வாலாட்ட விட கூடாது.. தக்க பதிலடி தர வேண்டும்.. மொத்த இந்தியர்களின் கருத்து இதுதான்!
அதில், "எல்லைப் பகுதியில் அத்துமீறல். கம்யூனிச சீனா அட்டூழியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லையில் ராணுவ வீரர்கள் இன்னுயிரை ஈந்து நாட்டை பாதுகாக்கின்றனர். நாம் சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும்" என்று தெரிவித்ததுடன், லடாக் எல்லை மோதல் குறித்து, வெளியுறவு துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா கூறிய விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலானோரின் கருத்தையே எச்.ராஜாவும் தெரிவித்திருந்தாலும், இதற்கும் சிலர் எதிர்ப்பு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "சீனப்பொருட்கள் இப்பொழுதுதான் நீங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளீர்களா? உலகமயமாக்கல் கொள்கை என்பது நினைவிருக்கிறதா?" என்றும், 2,989 கோடி சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே ? அதை இந்தியாவில் செய்து இருக்க முடியாதா ? சீனாவில் இருந்து வந்த சர்தார் வல்லபாய் சிலை சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுமா? நம் பணம் நமக்கு திரும்ப கிடைக்குமா" என்றும் கேள்விகளை எழுப்பி கொண்டுள்ளனர்.