நேரு காலத்தில் இருந்தே.. முதுகில் குத்துவது முழுநேர வேலை.. மாமல்லபுரம் நட்பை கேலிக்கூத்தாக்கிய சீனா
சென்னை: 1962ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை, சீனா எப்படி முதுகில் குத்தியதோ அதேபோல, இப்போது இந்தியாவின் முதுகில் குத்தி உள்ளது சீனா.
உள்நாட்டு போராட்டங்கள், போர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சீனா மீண்டு வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியாவும் சுதந்திரம் பெற்ற கையோடு, தனது உணவு உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலைமையில் இருந்ததும் அதே காலகட்டம்தான்.
ஆம்.. நாம் பேசுவது 1950கள் பற்றி. உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாக இருந்தது.
லடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்
நேரு நன்மதிப்பு
இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மீது, உலகம் முழுவதும் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆசியாவின் மிகச் சிறந்த தலைவர் என்ற இமேஜ் அவருக்கு வாய்த்தது. இந்த நிலையில்தான், 1954ம் ஆண்டு அக்டோபரில் ஜவஹர்லால் நேரு பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தார். இருதரப்பு உறவு வலுப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. "நமது இரு நாடுகளையும் [சீனா மற்றும் இந்தியாவை] பெரும் வல்லரசுகளாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை" என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாவோ சேதுங் அப்போது நேருவிடம் கூறினார். அதாவது சீனா இந்தியாவை வல்லரசாக அங்கீகரித்துவிட்டது என்ற தொனி மாவோ பேச்சில் தென்பட்டது.
சீனாவின் வன்மம்
இந்த நிலையில்தான் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் சபையில், அந்த நாட்டு அதிபர் ஜான் கென்னடி ஒரு முழக்கத்தை முன் வைத்தார். ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தப்போவது, ஜனநாயக இந்தியாவா, கம்யூனிஸ்ட் கட்சியின் சீனாவா என்று ஒரு ஒப்பீட்டை அவர் முன்வைத்தார். இதை இந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சீனா இதை வன்மமாக மனதுக்குள் பதிய வைத்தது. மூன்றாம் உலக நாடுகளின் தலைமை இடம் சீனாவுக்குதான் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு விரும்பியது. இதற்கு இடையூறாக இருப்பது இந்தியாதான் என்பதை புரிந்து கொண்டு, இந்தியாவின் நன்மதிப்பையும், ராணுவ பலத்தையும் குறைத்து காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
Recommended Video
இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்
ஆனால் சமாதான புறா என்று அழைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மோதலுக்கு தயாராக இல்லை. நட்பின் மூலமும், இணைந்து செயல்படுவதும் ஆக்கபூர்வமாக இருக்கும் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். சீன பிரதமர் ஜாவ் என்லாயின் 1960ல் இந்தியா வருகை தந்தார். இந்திய வெளியுறவு செயலர் சீனா விஜயம் செய்தார். இப்படியாக இருந்த நட்பை, பலப்படுத்த, ஜவகர்லால் நேரு ஒரு முக்கியமான முழக்கத்தை முன் வைத்தார். ஹிந்தி சைனி பை பை - Hindi Chini Bhai Bhai- அதாவது இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள் என்ற அர்த்தத்தில் இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டது. 50களில் இந்த முழக்கம் வெகு பேஃமஸ்.
முதுகில் குத்திய சீனா
இப்படியாக இந்திய தரப்பு நட்பை நாடியது. ஆனால் சீனாவோ 1962ஆம் ஆண்டில் இந்திய ராணுவ நிலைகள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது. 1959ல் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அந்த காலகட்டத்தில்தான் அங்கிருந்து தப்பிவந்த தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இதுதான் சமயம் என்று தனது ஒட்டுமொத்த வன்மத்தையும் மொத்தமாக கொட்டியது சீனா. அதற்கு முன்பாக சீனா காட்டிய நட்புறவை நம்பி ஏமாந்து போனார் ஜவகர்லால் நேரு. நமது மீது சீனா தாக்குதல் நடத்தாது என்று அவர் நம்பியிருந்தார். இதனால் எல்லைகளில் போதிய அளவுக்கு ஆயுதங்களுடன் படைகளைக் குவிக்க தவறிவிட்டார். இதை பயன்படுத்தி, இந்தியப் படைகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது சீன ராணுவம்.
கொல்கத்தா நோக்கி வந்த சீனா
வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களையும் கைப்பற்றி கொண்டு ஒரு கட்டத்தில் கொல்கத்தா நகரையும் சீனா கைப்பற்றும் என்ற நிலை ஏற்பட்டது. இனியும் சமாதானம் கை கொடுக்காது, நமது முதுகில் குத்தி விட்டனர் என்பதை உணர்ந்த ஜவகர்லால் நேரு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியை கோரி கடிதம் எழுதினார். இந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு போரில் உதவி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் முன்பாகவே, சீனா தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் நைசாக பெருந்தன்மை போல காட்டி, போரை நிறுத்துவது போல பம்மாத்து காட்டியது சீனா.
வலிமையை காட்ட நடத்தப்பட்ட போர்
ஆனால் பிற்காலத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இது தொடர்பாக பரிமாறிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்தன. அதில் ஒரு முக்கியமான தகவல் என்பது, சீனாவிடம் எல்லையில் இந்தியா இனி எந்த காலத்திலும் அத்துமீறி விடக்கூடாது. இந்தியாவை கடுமையாக தாக்கி அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். சீனாதான் ராணுவ வலிமையில் பெரிய நாடு என்பதை நேருவுக்கும், இந்தியாவுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தினோம் என்று ஸ்வீடன் நாட்டு தூதரிடம் 1963ம் ஆண்டு சீன அதிபர் சீன அதிபர் லியாவோ ஷாவோ பேசிய தகவல்களை சிஐஏ வெளியிட்டது. நேருவின் மதிப்பையும் இந்தியாவின் ராணுவ பலத்தின் மீதான மதிப்பையும் குறைத்து, ஆசியாவின் பெரிய அண்ணன் சீனாதான் என்பதை காட்டுவதற்காக இந்திய ராணுவத்தின் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியது சீனா. போதிய அளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யாததால் அந்தப் போரில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
சீனாவின் கெட்ட எண்ணம்
இதன்பிறகு 1975 ஆம் ஆண்டு அருணாச்சல் பிரதேசம் பகுதியில் ஒரு துப்பாக்கி சண்டையில் இந்திய ரோந்து படையினர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இதுவரை ஒரு துப்பாக்கி குண்டு கூட சீன தரப்பில் இருந்து இந்தியா நோக்கி வந்தது கிடையாது. இதன்மூலம் ஆசிய பிராந்தியத்தின் பெரிய அண்ணன் தாங்கள் என்பதை உலகத்திற்கு.. குறிப்பாக அமெரிக்காவுக்கு காட்ட வேண்டும், இந்தியாவை சிறுமைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதுதான் சீனாவின் விருப்பமே தவிர, எல்லையில் பெரிதாக பிரச்சினை இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்க அதிபருக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எழுதிய கடிதத்தில் கூட, சீனாவை குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கு அது உதவி செய்வதை சுட்டிக் காட்டினார். இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தால்தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார் வாஜ்பாய்.
சீன எல்லையில் பலமாகும் இந்தியா
இந்த நிலையில்தான், பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கு சீனா தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் லடாக் பகுதியில் இந்திய ராணுவம் மீது, சீன ராணுவம் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நேரத்தில் நாம் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் வருகை தந்தார். அங்கு நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இது இரு நாடுகள் நடுவே நட்பை அதிகரிப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்டது. ஏனெனில் ஒரு சுற்றுலா பயணியைப் போல மாபல்லபுரம் வருகை தந்த ஜி ஜின்பிங்கை, மாமல்லபுரத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறி அனுப்பி வைத்திருந்தார் நரேந்திர மோடி.
கானல்நீரான மாமல்லபுரம் நட்பு
இருவரும் ஒன்றாக அமர்ந்து இளநீர் சாப்பிட்டனர், பிறகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறைவதற்கான ஒரு முன்னெடுப்பு இந்தியாவால் நடத்தப்பட்டது. ஆனால் சரியாக ஓராண்டு கூட முடியவில்லை. அதற்குள்ளாக 1962 ஆம் ஆண்டு நடத்தியது போன்ற துரோகத்தை அரங்கேற்றிவிட்டது சீனா. ஜவகர்லால் நேருவை போல சீனாவுக்கு இப்போது உறுத்தலாக இருப்பது, நரேந்திர மோடி என்ற பிம்பம். அப்போது நேரு எவ்வாறு ஒரு ஆளுமையாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டாரோ, இப்போது மோடி அதுபோல ஒரு ஆளுமையாக உருவெடுத்து விடக்கூடாது என்பதில்தான் சீனா மிகவும் கவனம் செலுத்துகிறது.
இளம் இந்திய படை
மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் மோடி காட்டும் நெருக்கமும் அவர்களுக்கு நேருவை நினைவுபடுத்துகிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சீனா ஒரு விஷயத்தை மறந்துவிட வேண்டாம். இது 1962ஆம் ஆண்டின், இந்திய ராணுவம் கிடையாது. சர்வ வல்லமை கொண்ட ராணுவம். உலகின் அதிநவீன அணு ஆயுதங்களையும், போர் விமானங்களையும், மலைப்பாங்கான பகுதிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய லட்சக்கணக்கான வீரர்களையும் கொண்ட இளம் இந்தியப்படை இது. பாகிஸ்தான் படைகளை பந்தாடி, வங்கதேசம் என்ற ஒரு நாட்டையே உருவாக்கியது இந்த இந்திய ராணுவம்தான். கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை, உலகின் மிக உயர்ந்த மலைப் பகுதி என்ற அந்த கடினமான சூழலுக்கு நடுவேயும், புறமுதுகிட்டு ஓட வைத்து, மூவர்ண கொடியை மலை உச்சியில் நாட்டி, பட்டொளி வீசி பறக்கவிட்டது, இந்த இந்திய ராணுவம்தான். இதை சீனா மறந்துவிடாது என்று நம்புவோமாக.