டைம் மிஷின் உண்மைதானா.. 90ஸ் நாட்களுக்கு திரும்பிய இந்தியா.. என்ஜாய் மக்களே #90skids
சென்னை: சமூகவலைத்தளங்களில் 90s கிட்ஸ் என்ற பெயரில் சமீபகாலமாக மீம்ஸ்கள் மற்றும் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
Recommended Video
1990களில் பிறந்தவர்கள் மட்டுமின்றி, 1980களில் பிறந்து 90களில் குழந்தை பருவத்தில் இருந்தவர்களும் இந்த லிஸ்டில் வருகிறார்கள்.
1990ஸ் என்பது உலகமயமாக்கலுக்கு இந்தியா திறந்துவிடப்பட்ட காலகட்டம். எனவே இருவகையான வாழ்க்கை முறைகளை ஒரே நேரத்தில் கண்டுணரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் 90ஸ் கிட்ஸ்.
ஒரு பக்கம் வீட்டுக்கு லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு கேட்டு, அதற்கு மாதக்கணக்கில் காத்திருந்து, பிறகு கம்பம் நடுவதற்கு கூட, நாமே பணம் கொடுத்து இணைப்பு பெற்ற அதேநேரத்தில், 90களின் பிற்பகுதியில் செல்போன்களும் அறிமுகமாகி வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது.
1970ல் வந்த ஒரு சட்டம்.. சீனா எடுத்த தவறான முடிவு.. சார்ஸ் தொடங்கி கொரோனா வரை.. உருவான வரலாறு!
கேசட் டூ சிடி
கேசட் காலகட்டத்திலிருந்து சிடி காலகட்டத்துக்கு மாறியது, இணையதளமும் அறிமுகமானது. பணம் சேர்த்து பைக், கார் வாங்கும் நிலை மாறி, வாகனத்தை வாங்கிவிட்டு இஎம்ஐ மூலம் பணம் செலுத்தலாம் என்ற வாய்ப்பு திறக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் பல மாற்றங்களை கண்டு விஸ்வரூப வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் அந்த காலத்து குழந்தைகள். அதனால்தான் அவர்களால் கரகாட்டக்காரனையும் ரசிக்க முடிகிறது, கேம் ஆப் த்ரோன்சையும் பார்க்க முடிகிறது.
ராமாயணம்
தூர்தர்ஷன் உள்ளிட்ட ஒரு சில சேனல்கள்தான் அப்போது ஒளிபரப்பப்பட்ட நிலையில், மகாபாரதம், ராமாயணம், சக்திமான், சந்திரகாந்தா, மர்ம தேசம் போன்ற தொடர்கள் மட்டுமே, தங்களுக்கு பொழுதுபோக்காக இருந்ததை பல நேரங்களில் 90ஸ் கிட்ஸ் சமூக வலைத்தளத்தில் பேசுவார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மேல் தின்பண்டங்களுக்கு செலவிட்டது இல்லை என்பதையும், 2000ஸ் கிட்ஸ் அதிகமாக செலவிடுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு தெரிவித்து, தங்கள் காலகட்டத்தை மகிழ்ச்சியோடு சொல்வார்கள். காலச் சக்கரம் கிடைத்தால், பழைய காலத்துக்கே நாங்கள் போய்விடுவோம் என்று கூட சிலாகிப்பார்கள்.
டைம் மெஷின்
ஆனால் உண்மையிலேயே காலச்சக்கரம் அதாவது டைம் மெஷின், நிஜமாகவே, இப்போது வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அப்படியே, டைம் மிஷினை பிடித்து 20 வருடம் பின்னோக்கி சென்று உள்ளது இந்தியா. ஆம்.. இப்போது சன் டிவியில் மீண்டும் மெட்டிஒலி சத்தம் கேட்கிறது. தூர்தர்ஷனில் மகாபாரதம், ராமாயணம், சக்திமான் ஒளிபரப்பாகிறது. நாம் இப்போது 2020ஆம் ஆண்டில் தான் இருக்கிறோமா என்பதை கிள்ளிப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்துள்ளது.
போர் அடிக்குதே
இப்போதும் தின்பண்டங்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலையில்தான் குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்டி, தாத்தாவிடம்தான் இப்போது கதை கேட்கும் நிலை குழந்தைகளுக்கு வந்துவிட்டது. காரணம் ஊரடங்கு. 90ஸ் கிட்ஸ் தங்கள் உணர்வுகளை ஓவராக கொட்டி விட்டதாலோ, என்னவோ, காலமே அவர்களை இப்போது பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. 1990ஸ் மீது இருந்த கிரேஸ் அனேகமாக இந்த 21 நாட்களில் பலருக்கும் போய்விடும். ஏனெனில் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
முன்னோக்கி பாருங்கள்
இந்த காலகட்டத்தை தாங்கள் இழந்ததாக, நினைத்து வருந்திய அத்தனையையும் செய்து அதை அனுபவித்து 21 நாள் காலக்கெடுவுக்கு பிறகு மீண்டும் 2020 ஆம் ஆண்டில் அடி எடுத்து, நமது பார்வையை முன் நோக்கி வைக்க வேண்டும், என்பதுதான் அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது.