47 நாட்களுக்கு பிறகு முதல் முறை.. குணமடைந்தோரை விட அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: இந்தியாவில் 47 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக புதிதாக பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிலிருந்து குணமடைந்த எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக காணப்பட்டதால், ஒரு கட்டத்தில் குணமடைவோர் எண்ணிக்கையை விடவும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 47 நாட்களாக தொடர்ந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால் வியாழக்கிழமை மத்திய அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 45 ஆயிரத்து 882 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால் நோயிலிருந்து குணமடைந்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 807 என்ற அளவில் உள்ளது.
47 நாட்களுக்கு பிறகு
சிறிய அளவு வித்தியாசம்தான், என்ற போதிலும் கூட 47 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக புதிய கேஸ்கள் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.
ஊரடங்கு
ஒரு பக்கம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஊரடங்கு உத்தரவு பழையபடி அமலுக்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் வீதியில் முண்டியடித்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளனர். மற்றொரு பக்கம் இதுபோல புள்ளிவிபரம் வந்துள்ளதால் மீண்டுமொரு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அரசு தரப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முதல் முறை
கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு பிறகு தினசரி பதிவாகும் கொரோனா வைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை, குணமடைவோர் எண்ணிக்கையைவிட குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் மீண்டும் பாதித்தவர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இரண்டாவது அலை வீசுவதால், கொரோனா வைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது நாட்டில், டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் சமீபகாலமாக கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த மாநிலங்களில் மூன்றாவது அலை வீசுவதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல்
பண்டிகை காலம் முடிவடைந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நோய் பரவல் அதிகரிப்பு வரும் காலங்களில் அதிகம் பதிவாக கூடும் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க மறுபடி கொரோனா வேகமாக பரவுமோ என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது சில மருத்துவ நிபுணர்களின் கருத்துகள். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் 94 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 7500 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 5700 புதிய கேஸ் பதிவாகியுள்ளன.