வேகமெடுக்கும் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கோவாக்ஸின்.. அடுத்த வாரமே 375 பேரிடம் டிரையல்
சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி Covaxin (கோவாக்சின்), இரண்டு கட்டங்களாக 1,100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க ஐசிஎம்ஆர் அமைப்பின் ஒப்புதல் பெற்றுள்ளது.
கோவாக்சின் என்று அழைக்கப்படும், இந்த தடுப்பூசியின், 1வது கட்ட சோதனை அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி 2021க்கு முன் சாத்தியமில்லையா? கருத்தில் பின்வாங்கிய மத்திய அமைச்சகம்
12 பகுதிகளில் முதல்கட்ட பரிசோதனைகள்
முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் 375 பேரை சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) செய்தித் தொடர்பாளர் ஒருவர் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். டெல்லி மற்றும் பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உட்பட இந்த டிரையல் சோதனைகளை நடத்த ஐசிஎம்ஆர் 12 இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. முதல் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து, இரண்டாம் கட்ட பரிசோதனையில் 750 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் ஒப்பந்தம்
ஜூலை 7ம் தேதி மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு தேவையான அனுமதிகளை விரைந்து பெறுமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மருத்துவமனைகளுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் தயாரித்த கொரோனா தடுப்பு தடுப்பு மருந்தை விரைவாக பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15க்குள் முடிவு தேவை
எல்லா பரிசோதனைகளையும் முடித்து, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை பாரத் பயோடெக் நிறுவனம் வேகமாக செய்து வருகிறது. இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஆய்வு மையங்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த இலக்கை எட்ட முடியாது. எனவே இந்த திட்டத்துக்குத் தேவையான எல்லா அனுமதிகளையும் விரைவாக அளிக்கவேண்டும். தன்னார்வலர் தேர்வு ஜூலை 7ம் தேதிக்குள் துவங்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இரவு, பகலான உழைப்பு
ஹைதராபாத்தின் நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் பரிசோதனைகளை நடத்த உள்ள ஐ.சி.எம்.ஆர் அனுமதி பெற்ற இன்ஸ்ட்டிடியூட்டில் ஒன்றாகும். "நாங்கள் அனைவரும் காலக்கெடுவிற்குள் தடுப்பூசியை கொண்டுவர, இரவும் பகலும் உழைக்கிறோம்" என்று நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் பிரபாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி
தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படுமா என்பது அந்த சோதனைகளின் முடிவை பொறுத்தது என்று ஐ.சி.எம்.ஆர் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். பாரத் பயோடெக் நிறுவனம் முன்னர் போலியோ, ரோட்டா வைரஸ், ஜப்பானிய என்செபாலிடிஸ் மற்றும் ஜிகா ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.