9 மாதங்களுக்கு பிறகு திருப்பம்.. சீன அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு திட்டம்
சென்னை: சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவிலிருந்து நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் 'ராய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. குறிப்பாக டிஜிட்டல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் சீனா நாட்டை சேர்ந்த முதலீடுகள் குவிந்தன. இந்த நிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டது.
இதை எதிர்த்து இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. எல்லையின் பல்வேறு பகுதிகளிலும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் எதிர் கொண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
அன்னிய நேரடி முதலீடு
இதையடுத்து, அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு மாற்றி அமைத்தது. அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அனுமதி
இதன் காரணமாக ஒரு நிறுவனத்தில் ஒரு பங்கை மாற்ற வேண்டுமென்றால் கூட மத்திய அரசின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக விதிமுறைகளில் சில தளர்வுகளை மத்திய அரசு கொடுத்தாலும் கூட, சீன முதலீட்டு விஷயத்தில் மிகவும் உறுதியோடு இருந்தது அரசு.
2 பில்லியன் டாலர்
இதன் காரணமாக, சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகள் தேங்கியபடி இருந்தன. அவற்றுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. சுமார் 9 மாத காலம் இழுபறிக்குப் பிறகு சீனாவை சேர்ந்த சுமார் 45 முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்பு
அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தங்களிடம் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் ஒரு தகவலை கூறியுள்ளது: இந்த 45 முதலீட்டு திட்டங்களும் உற்பத்தித் துறை சார்ந்த திட்டங்களாகும். தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகள் கிடையாது என்பதால் அவற்றுக்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அந்த ஏஜென்சி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய திட்டங்கள்
இரு தரப்பு பேச்சுவார்த்தை பலனாக, பாங்கோங் ஏரி பகுதியில் மட்டும் சீனப் படைகள் வாபஸ் பெற்றுள்ளன. கிழக்கு லடாக்கின் மேலும் சில பகுதிகளில் சீனப் படைகள் இன்னும் இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 45 திட்டங்களில் கிரேட் வால் மோட்டார் மற்றும் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் கார்ப் ஆகியவற்றின் முதலீடுகளுக்கும் அரசு அனுமதிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் ஏஜென்சி கூறியுள்ளது.