நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.. அயோத்தி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை: அயோத்தி பாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி நில உரிமை தொடர்பான வழக்கில் இன்று (9-11-2019) உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல்,சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிற நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்திருப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை எஸ்.எம்.பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "கடந்த 2010ல் அலஹாபாத் நீதிமன்றம் இதே வழக்கில்,சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டு விட்ட 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒன்றை முஸ்லிம் தரப்பிற்கும் இரண்டு பகுதிகளை இந்துத்துவா தரப்பிற்கும் வழங்கி தீர்ப்பளித்திருந்தது.இது அநியாயமான தீர்ப்பு என்று கூறி அதனை எதிர்த்துதான் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
சர்ச்சைக்குரிய நிலம் தங்களுக்கு வேண்டும் என இந்துத்துவா தரப்பும் மேல் முறையீடு செய்திருந்தது.இதில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலமும் இந்து தரப்பினருக்கு வழங்கி அங்கே ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்.அதற்கான ஒரு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லீம்களுக்கு
இந்த அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுமானப் பணியை கண்காணிக்க வேண்டும் என்றும்,அதே சமயம் முஸ்லிம் தரப்புக்கு அயோத்தியில் (2.77 ஏக்கருக்கு வெளியே) அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கரை சொந்தமாக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நபர் அரசியல் சாசன பெஞ்ச் கூறியுள்ளது.
ஆதாரங்கள் அடிப்படை
சட்டத்தின் அடிப்படையில்,ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் இந்த அடிப்படையை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது.இதன் மூலம்,உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில்
அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டிலும் மிக மோசமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தராது என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையை நீதித்துறை சிதைத்திருக்கிறது. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இந்து தரப்பு வாதத்திற்கு சட்ட வடிவம் தந்து அங்கே ராமர் கோவில்தான் கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் மஸ்ஜித் கட்டிக் கொள்ளலாம் என்ற வியாக்கியானத்தை வலிந்து கொடுத்திருக்கிறது.
மஸ்ஜித்தான்
அதே சமயம்,ஒருமுறை மஸ்ஜித் கட்டப்பட்டு விட்டால் அது கடைசிவரை முஸ்லிம்கள் வழிபடும் மஸ்ஜித்தான் என்ற முஸ்லிம் தரப்பின் அழுத்தமான கருத்தை அலட்சியப்படுத்தியிருக்கிறது.பாபரி மஸ்ஜித் இருந்த இடம்தான் முக்கிய பிரச்சினை என்ற நிலையில்,அதையொட்டியுள் வெளி முற்றம் என்று சொல்லப்படுகின்ற ராம் சவுத்ரா,சீதா சிலை ஆகியவை அமைந்துள்ள இடம் இந்துக்கள் 1857 முதல் பூஜை செய்து வரக் கூடிய இடம் என்று (சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விஷயத்திற்கு) அழுத்தம் கொடுத்திருக்கிறது.
திருப்தியில்லை
நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்த தீர்ப்பு திருப்தியைத் தரவில்லை.ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் வழி அமைத்துத் தந்திருக்கிறது இந்த தீர்ப்பின் மூலம்!
சகிப்புத்தன்மை
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோஸ் வர்மா கூறியுள்ளதுபோல் உச்ச நீதிமன்றம் உச்சபட்சம் கொண்ட அமைப்புதான்.ஆனால்,தவறிழைக்காத ஒன்றல்ல...என்பதைத்தான் அதேவேளை இந்த தீர்ப்பு அதிருப்தியை அளித்த போதிலும்,நாட்டு மக்கள் அமைதி காத்து,சமூக நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தி நாட்டில் அமைதியான சூழலுக்குப் பாடுபட வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.