இப்போதுதானே பேச வேண்டும்.. முக்கியமான நேரத்தில் மௌனம்.. ஏன் அமைதி காக்கிறார் நிர்மலா சீதாராமன்?
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.
Recommended Video
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.
விமானி அபிநந்தன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை? என்பதை விட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை? என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும். அந்த அளவிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மௌனம் காத்து வருகிறார்.
பொதுவாக போர், போர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வேளைகளில் ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள்.
பேட்டி அளிப்பார்கள்
எல்லா நாடுகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும்தான் பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால் இதுவரை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படி எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சீனாவில் மூன்று நாடுகள் மாநாட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களை சந்திக்கவில்லை
ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பிரச்சனை தொடங்கியதில் இருந்து ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. போர் பதற்றம் குறித்து, இந்திய விமானி கடத்தப்பட்டது குறித்து வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. செய்தியாளர்களை சந்திப்பது மட்டுமல்ல, ஒரு அறிக்கை கூட அவர் சார்பாக இதுவரை வெளியாகவில்லை.
ரபேல் ஒப்பந்தம்
ரபேல் ஒப்பந்த விவகாரம் சூடாக இருந்த போது நிர்மலா சீதாராமன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். முக்கியமாக ரபேலில் உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போது சந்தோச மிகுதியில் ஒரே நாளில் 2 முறைக்கும் மேல் செய்தியாளர்களை சந்தித்தார். அன்று பாஜக 20 முறைக்கும் மேல் செய்தியாளர்கள் சந்திப்பை வேறு வேறு இடத்தில் நடத்தியது.
[Read more: Abhinandhan: அபிநந்தனை மீட்பதற்காக ராஜாங்க ரீதியில் இந்தியா நடவடிக்கை]
மௌனம்
தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா பிரச்சனை தொடர்பான விஷயங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மௌனம் காத்து வருகிறார். சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட போதும், பாகிஸ்தானுக்கும் புகுந்து இந்த விமானப்படை தாக்கிய போதும், நேற்று இந்திய விமானி கைது செய்யப்பட்ட போதும் கூட இதே போல நிர்மலா சீதாராமன் அமைதிதான் காத்தார்.
மீட்டிங் செய்கிறார்
அதேபோல் இந்த முக்கிய நேரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராக இவர் நடத்திய மீட்டிங் இதுவரை ஒன்றே ஒன்றுதான். மற்ற எல்லா மீட்டிங்கும் பிரதமர் மோடி தலைமையில் மட்டுமே நடைபெற்றது. தொடர்ந்து இந்த விஷயத்தில் ஒரு பாதுகாப்பு துறை அமைச்சராக செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் அமைதியாக இவர் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
யார் கொடுக்கிறார்கள்
ஆனால் இது தொடர்பான பேட்டிகளை எல்லாம் அதிகமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்தான் வழங்குகிறார். தொடர்பே இல்லாமல் அமைச்சர் அருண் ஜேட்லி பேட்டிகளை அளித்து பாகிஸ்தானுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.