இந்தியன் 2 விபத்து.. கமல்ஹாசனுக்கு சம்மன்.. நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு!
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.
இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இந்த விபத்தில் காயம் அடைந்தோர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தற்போது இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார் . ஷங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் சென்னை வேப்பரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.