கொரோனா தடுப்பு- மருத்துவர்களை பாதுகாக்க நடவடிக்கை- பிரதமர், முதல்வருக்கு டாக்டர்கள் நன்றி
சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக பிரிவு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இதேபோல் கொரோனா தடுப்பு பணியில் மரணிக்கும் மருத்துவர்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவர் என்றும் மருத்துவர்கள். சுகாதாரப் பணியாளர்கள் இறந்தால் குடும்பத்துக்கு ரூ50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக பிரிவு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இச்சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சி.என். ராஜா, மாநில செயலாளர் டாக்டர் ஏ.கே. ரவிக்குமார் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை எங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவருவதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை நாங்கள் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளனர்.