கடலூர் - பாம்பனிடையே கரையை கடக்கும் 'கஜா'... திசை மாறியது புயல்
Recommended Video
டெல்லி: கஜா புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கடலூர் பாம்பனிடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினம் வடகிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் நீடிக்கிறது. இதன் தாக்கம் நவம்பர் 14ம் தேதி முதல் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கரை திரும்பவும், நவம்பர் 15 வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கஜா புயலானது சென்னை நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயல் கரையை கடக்கும் திசையில் மாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் தான் கரையை கடக்கும் என்றும், ஆனால் புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 14 மாலை முதல் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யும் வாய்ப்பும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.