பேய்ட்டி புயல் எதிரொலி… ஆந்திரா, புதுச்சேரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை... இந்திய வானிலை மையம் அறிவிப்பு
சென்னை : பேய்ட்டி புயல் எதிரொலியாக, ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் சின்னம் சென்னைக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவுக்கு தென்கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
அந்த புயலானது 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் பேய்ட்டி புயல் தீவிர புயலாக மாறி ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையே நாளை மதியம் கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதன் விளைவாக வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் ஆந்திரா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு முடுக்கி விட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
விசாகப்பட்டினம், கோதாவரி கிழக்கு, மேற்கு மற்றும் குண்டூர் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.