ஊழல்வாதிகள் தேசவிரோதிகள்! கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம்...- உயர்நீதிமன்றம் வேதனை
சென்னை: கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். ஊழல்வாதிகளை தேசவிரோதிகளாக அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சரவணன் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் உத்தரவிட்டார். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சரவணன் மனு தள்ளுபடி
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சஸ்பெண்ட் நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சரவணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் உட்பட 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18ல் இடைத் தேர்தல் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
வேதனை
மேலும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தன்னுடைய உத்தரவில் கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலும் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும், லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க வலியுறுத்தும் துரதிஷ்டவசமான நிலையும் உள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
வாக்கு பணம்
லஞ்சம் சமுதாயத்தில் சாதாரண விஷயமாகி விட்டதாகவும், ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக பரவலாக பேசப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்துவிடும் எனவும் நீதிபதி கூறியிருந்தார்.
வாக்காளர்கள்
வாக்காளர்கள் வாக்கின் புனிதத்தன்மையை உணர்வதில்லை என்றும், இதன் மூலமாகத்தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கவலை தெரிவித்தார்.
நீதித்துறையில் ஊழல்
மேலும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும், நீதித்துறை அதிகாரிகளையும் தேச விரோதிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்களால் தான் நாட்டின் வளர்ச்சி தடை படுவதாகவும் நீதிபதி கோபமாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.