தேர்தல் ரிசல்ட்டை கணித்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை தொடர்ந்து சரியும் பின்னணி
Recommended Video
சென்னை: மீண்டும் நாட்டில் நிலையான ஆட்சி அமையுமோ, அமையாதோ என்ற சந்தேகத்தால், தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. ஏழாவது நாளாக தொடர்ந்து பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதன், பின்னணியில் சில முக்கியமான காரணங்கள் உள்ளன, அதில் ஒன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு.
பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, சீனா பொருட்களின் மீது அமெரிக்கா அதிகமான வரி விதிப்பை, அமல்படுத்தி வருகிறது. சீனா மீதான அமெரிக்காவின் பொருளாதார போர் என்று இது அழைக்கப்படுகிறது. சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இன்னும் கூடுதல் சீன பொருட்களுக்கு வரி விதிப்பை இரட்டிப்பாக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து, உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தை மார்க்கெட்டில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு பொருளாதார வல்லரசு நாடுகள் நடுவேயான மோதல், உலகின் அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளிலும், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு முக்கியமான காரணம் என்பது லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பானதாகும்.
பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் முதலில் இருந்தனர். ஐந்து கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தொங்கு லோக்சபா அமையும் வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.
இதன் காரணமாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி அமைந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக, பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இன்றும் வீழ்ச்சியடைந்ததாக, பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இது தவிர வெளிநாட்டு நிதி வெளியேற்றம் அதிகரித்துள்ளது, நான்காம் காலாண்டில் பல நிறுவனங்கள் சரியாக செயல்படாது, உள்நாட்டு தேவை குறைந்துள்ளது போன்றவையும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றது.