சீன பல்கலைக்கழகத்தில்.. மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவர்.. விசாரணை தீவிரம்
சென்னை: சீனாவின் தியான்ஜின் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கயா பகுதியைச் சேர்ந்தவர் அமன் நாக்சென். இவர் சீனாவின் தியான்ஜின் வெளிநாட்டு ஆய்வு பல்கலைக்கழகத்தில் வணிக பிரிவில் படித்து வந்தார்.
இந்நிலையில், 20 வயதான அமன் நாக்செனின் உடல், கடந்த ஜூலை 29ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை செய்து வருவதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக தியான்ஜினில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இது தொடர்பாகப் பீகார் பாஜக தலைவர் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த சீனாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதாகவும் ட்வீட் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கடந்த 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சீனாவில் படித்து வந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர். தற்போது வெகு சில இந்திய மாணவர்கள் மட்டுமே சீனாவில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.