ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அபார வெற்றி: வாழ்த்திய முதல்வர்... நன்றி சொன்ன அஸ்வின்
பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. முக்கிய வீரர்கள் களத்தில் இல்லாத நிலையிலும் அறிமுக வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த 69 ஆண்டுகளுக்குப் பின் பிரிஸ்பேன் மைதானத்தில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வென்றுள்ளது.
காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை இந்திய அணி மாற்றியுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். திரை உலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
முதன் முறையாக டெஸ்ட் தொடரில் களம் கண்ட தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து கூறியுள்ளார். போட்டியில் பங்கேற்ற மூன்று தமிழக வீரர்களையும் பாராட்டியுள்ளார்.
பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் வாழ்த்துக்கு அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். நன்றிகள் பல, ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் தலைச்சிறந்த வெற்றி ஆக இதை கருதுகிறேன். நம் தமிழ் மண்ணிலிருந்து மூன்று பேர் பங்கேற்றது எனக்கும் பெருமையை அளிக்கிறது. எனது வாழ்த்துக்கள் வாஷி & நட்டுக்கும் என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.