கல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்!
சென்னை: கல்யாண சீசன் தொடங்கிவிட்டது. பத்திரிகைகள் வரிசை கட்டி வர ஆரம்பித்துவிட்டன. இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு போகும்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டிருப்பதை கவனிக்க முடிகிறது.
சின்ன இடம், பெரிய இடம் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் தங்களால் முடிந்த வகையில் புதுப்புது விஷயங்களை தங்கள் வீட்டு திருமணத்தில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மண்டப வாசலில் செண்டை மேளம் அதிரடிக்கும், உள்ளே போனா டிஜே புண்ணியத்தில இளசுகள் தனியா ஒரு பக்கம் குத்து போட்டுகிட்டு இருக்காங்க. வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்க கூட ஆளுயுர பொம்மைகள் வந்துவிட்டன. குறுக்கும் மறுக்கும் நடந்து கை கொடுத்து குழந்தைகளுக்கு குதூகலமூட்ட மிக்கியும், டொனால்டும் கூட நம்மூர் திருமணங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கென தனியாக ஆட்கள் எல்லாம் வந்துவிட்டார்கள்.
சமீபத்தில் நடந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் வீட்டு திருமணம்தான் டாக் ஆஃப் த டவுன். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழக்கமான இன்னிசை கச்சேரியைத்தாண்டி கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று பட்டையை கிளப்பினார்கள். வண்ண வண்ண மலர்களைப் போல ஆடை அணிந்த இளம்பெண்கள் சூழ்ந்து வர, மணப்பெண்ணை இளவரசியைப் போல பல்லக்கில் தூக்கி வந்து அசத்தினார்கள். வந்திருந்தவர்களுக்கு பெரிய வெள்ளித்தட்டில் விதவிதமாக விருந்து படைத்த காட்சிகளும் இணையத்தில் வைரலாக வலம் வருகின்றன.
ஆகம விதிகளை மீறி
அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தை நட்சத்திர ஹோட்டல் போல மாற்றி நடைபெற்ற ஆடம்பர திருமணமும் ஆகம விதிகளை காரணம்காட்டி விவாதப் பொருளாக மாறியது. அம்பானி, அதானி வீட்டு கல்யாணம் எல்லாம் நாம் நினைத்தே பார்க்க முடியாத வேற லெவல். இதேபோல பெரிய பெரிய பணக்கார வீட்டு திருமணங்களில் மணப்பெண்ணும், மாப்பிளையும் ஹெலிகாப்டரில் பந்தாவாக வந்து இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியர்கள் மட்டும்தான் கல்யாணத்தை இத்தனை ஆடம்பரமாக நடத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. திருமணங்களை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவதுமே பரவலாக காணப்படுகிறது.
பறந்தபடி மேரேஜ்
அந்தரத்தில் பாராசூட்டில் பறந்துகொண்டு கல்யாணம் செய்வது, நீருக்கடியில் நீந்திக் கொண்டே திருமணம் செய்வது, மலை உச்சியின் விளிம்பில் நின்றுகொண்டு மணமுடித்துக் கொள்வது என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இருவர் இணைந்து புதிய வாழ்வைத் தொடங்கும் அந்த அற்புத தருணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பே இந்த வித்தியாச முயற்சிகளுக்கு முக்கிய காரணம். இந்த முனைப்பு முத்திப் போகும்போதுதான் பல விநோத வில்லங்க ஐடியாக்கள் அரங்கேறிவிடுகின்றன.
ஓடி வந்த வரிக்குதிரைகள்
ஸ்பெயின் நாட்டின் கடற்கரை நகரான காடீஸில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது. கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்கள் திடீரென இரண்டு வரிக்குதிரைகள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்து மிரண்டுவிட்டார்கள். அப்புறம் கிட்ட போய் பார்த்தால்தான் அவை வரிக்குதிரை அல்ல கழுதைகள் என்று தெரிய வந்திருக்கு. காட்டில் திருமணம் நடப்பது போன்ற தீமில் திருமண ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். காடுன்னா ஏதாவது வித்தியாசமான விலங்கு இருக்கணுமேன்னு தேடினா ஒண்ணும் கிடைக்கல. சரி, கிடக்குது கழுதைன்னு இரண்டு கழுதையை பிடிச்சு வரிக்குதிரை மாதிரி பெயிண்ட் அடிச்சு விட்டிருக்காங்க திருமண ஏற்பாட்டாளார்கள். அடப்பாவிகளா என்று வாயைப் பிளந்தார்களாம் வந்த விருந்தாளிகள்.
டைனசோருக்குள் அக்கா!
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் ஒரு வித்தியாசமான விருந்தாளி கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த விருந்தாளி யார் தெரியுமா? ஒரு பிரம்மாண்ட டைனோசர். ஆமாம், விழா நடந்து கொண்டிருந்த இடத்திற்கு திடீரென ஒரு டைனோசர் தடதடவென நடந்து வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறது. யார்ரா இது என்று பார்த்தால், உடைக்கு உள்ளே இருந்து சிரித்துகொண்டே வெளியில் வந்திருக்கிறார் மணப்பெண்ணின் அக்கா. தங்கச்சி திருமணத்திற்கு வித்தியாசமா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு அமேசான்ல ஆர்டர் பண்ணி இந்த டிரெஸ்ஸை வாங்கினாராம். மணமக்களுடன் டைனோசர் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் போட்ட மாத்திரத்தில் வைரலாகிவிட்டன.
ஹெலிகாப்டரில் லேன்டிங்
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல குப்தா குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமணத்தை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மலை மீது பிரம்மாண்ட நடந்த இந்த திருமணத்திற்கு விருந்தினர்கள் எல்லாம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியிருக்கிறார்கள். சுமார் 200 கோடி செலவில் பனிமலையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து விருந்தினர்கள் எல்லாம் போன பிறகு பார்த்தால், அவர்கள் விட்டுப்போன குப்பைகளை மலை போல் குவிந்திருந்ததாம். இதனை சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் குப்தா குடும்பத்திற்கு ரூ 2.5 லட்சம் அபராதம் விதித்துவிட்டதாம். அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை, எங்க சொந்த செலவில் நாங்களே இந்த இடத்தை பழைய படி சுத்தப்படுத்தி தருகிறோம் என்று சொல்லிவிட்டார்களாம் குப்தா குடும்பத்தினர்.
சீர் அல்ல அல்ல கார் வரிசை
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டு திருமணத்தில் உலகப் புகழ்பெற்ற கார்களின் அணிவகுப்பை நடத்தி அனைவரையும் அசத்தியிருக்கிறார். உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான Lamborghini Aventador SVJ-யும் இந்த அணிவகுப்பில் இடம்பிடித்திருந்ததுதான் விழாவின் ஹைலைட். இது தவிர ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்சு ரோவர் என முன்னணி நிறுவனங்களின் கார்கள் அனைத்தும் கல்யாண வரவேற்பு ஊர்வலத்தில் வலம் வந்திருக்கின்றன. இதைப் பார்த்து ஊரே வாயைப் பிளந்ததாம்.
என்ன புண்ணியம்
இப்படி பணத்தை தண்ணியா செலவு செய்து திருமணம் நடத்துபவர்களை பத்தி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம், அது போன்ற திருமணங்களில் நேரிலும் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாத ஒரு பார்ட்டி இருக்கிறது. இங்கிலாந்தில ஒரு பொண்ணுக்கு கல்யாணம். அந்த பொண்ணு என்ன பண்ணியிருக்கா, கல்யாணத்திற்கு இவ்வளவு பேர் வந்து சாப்பிட்டு போனா எவ்வளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டிருக்கா. உடனே எல்லாருக்கும் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கா. அதாவது கணக்குப் போட்டுப் பார்த்ததுல, நீங்க தங்குறது, திங்குறதுன்னு ஒரு ஆளுக்கு தோராயமா 150 யூரோ செலவாகுது. அதனால கல்யாணத்துக்கு வர்ரவங்க குறைஞ்சது 120 யூரோ மதிப்புக்காவது ஏதாவது செஞ்சுட்டு போங்கன்னு செய்தி அனுப்பியிருக்கா. அதுமட்டுமில்லாம ஒரு கிஃப்ட் கொடுத்துட்டு குடும்பமே உட்கார்ந்து தின்னுட்டு போற வேலை இருக்க கூடாதுன்னும் கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்கா. இந்த மெசேஜை படிச்ச அவ நண்பர்கள் கடுப்பாகி ஆளாளுக்கு இணையத்துல அந்த பொண்ணை வளைச்சு வளைச்சு வறுத்துகிட்டிருக்காங்க.
காட்டுங்கோப்பா வாழ்ந்து
மொத்தத்தில், எவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்றோம்ன்றது முக்கியம் இல்லை. எவ்வளவு ஒற்றுமையோடு அந்த கல்யாணத்தில் இணைந்து வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். இன்றைய இளசுகள் இதற்குத்தான் உண்மையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்கள் பெரியவர்கள். வந்த விருந்தாளிகள் வியந்து பார்த்துட்டு போனா போதாது, அவங்க எப்பவுமே வியந்து பார்க்கறா மாதிரி வாழ்ந்து காட்டுங்க என்பதே பெரியவர்கள் சொல்ல விரும்பும் மெசேஜ்.
- கௌதம்