சென்னை-கொல்கத்தா இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. புகை, பயங்கர சத்தத்தால் பீதியடைந்த பயணிகள்
சென்னை: சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற, இண்டிகோ விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு பயங்கர சத்தம் உருவான சம்பவம் இப்போது அம்பலமாகியுள்ளது.
இண்டிகோ ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும், பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஜனவரி 3ம் தேதி சென்னையிலிருந்து, இருந்து இண்டிகோ ஏர்பஸ், கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. அப்போது நடுவானில், திடீரென இன்ஜின் பிளேடு பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பயங்கர சத்தம் எழுந்ததாகவும், புகை கிளம்பியதாகவும், பயணிகளை இது பீதிக்குள்ளதாக்கியதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜின் கோளாறையடுத்து, விமானம் மறுபடியும், சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து, தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ப்ராட் & ஒயிட்னி நிறுவனம்தான், இந்த விமானத்திற்கான இன்ஜினை சப்ளை செய்தது. ஏ320நியோ, வகை விமானம், முதல் முறையாக, இப்படியான பலவகையான பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
புகை, அதிக அதிர்வு, சப்தம் போன்றவை ஒரே நேரத்தில் எழுந்தது இதுதான் முதல் முறை என்பதால், விசாரணை நிறைவடையும்வரை, விமான இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புதிதாக இன்ஜின் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்கலாமா என்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து அறிந்ததும், விபத்து விசாரணை அமைப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலையம் விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். டிசம்பர் 10ம் தேதி ஜெய்ப்பூர்-கொல்கத்தா நடுவேயான இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது தொடர்பாகவும், இந்த அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.