அது ஏன் ஜனவரி 26-ஐ குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்?
Recommended Video
சென்னை: குடியரசு தினம், சுதந்திர தினம் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை என்று இப்போதைய குழந்தைகளிடம் கேட்டால் இரண்டு நாட்களுக்கும் பள்ளியில் விடுமுறை தருவார்கள், அன்று காலை கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்ற பதில் பெரும்பாலானோரிடம் இருந்து வரும்.
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் வேறுபாடு என்னவென்றால் நம்மில் பலரே குடியரசு தினம் ஜனவரி மாதமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதமும் கொண்டாடப்படுகிறது என்றே பதில் கூறுவோம் ஆனால் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது என்பதுதான் உண்மை.
சுதந்திர தினம்
சுதந்திர தினம் இந்தியாவை முற்று முழுதாக விட்டு விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய தினம். சுந்திர காற்றை நாம் முழுமையாக சுவாசித்த தினம். வாழ்வையும், வாழ்வுக்கு மேலாக உயிரையும் கொடுத்து நம்மவர்கள் போராடி போராடி பெற்ற சுதந்திரம் அது. இனிமேல் அந்நியன் நம்மை ஆழ முடியாது என்ற நிலையை உருவாக்கிய தினம் அது. இப்படியாக 1947- ம் ஆண்டு மாதம் 15ம் தேதி பிறந்த அந்த மணித்துளிகளில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம். அன்றுமுதல் நமது பெருமை மிகு இந்தியாவின் சுத்திர தினம் ஆகஸ்ட் 15 என்று பெருமகிழ்வோடு கொண்டாடி வருகிறோம்.
குடியரசு தினம்
குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த 3-வது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி 26- முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால் 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்கிறார். பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்படுகிறார்.
அதன் பின்னர் இந்தக் குழு உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்கிறது. அதில் உள்ள சிறந்த சட்டங்களை எடுத்து அதன் அடிப்படையில் இந்தியாவுக்கான அரசியலமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படுகிறது. பல்வேறு சட்ட விற்பன்னர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் நிறைவு பெறுகிறது.
முழுமையாக நிறைவு பெற்ற சட்டங்களை இந்திய அரசு உடனடியாக அமலுக்கு கொண்டு வரவில்லை. ஜனவரி 26 வரை காத்திருந்தார்கள்.
இதற்கான காரணத்தை அறிய சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். 1929-ம் ஆண்டு லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடுகிறது. அந்த மாநாட்டில் முழுமையான சுதந்திரம் பெறுவதே காங்கிரசின் நோக்கம் என்று முடிவு செய்யப்படுகிறது. அதோடு முற்று முழுவதுமான சுதந்திரம் கிடைக்கும் வரை அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26- ம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடுவது என்ற முடிவை எடுக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஜனவரி 26 - குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆக 1949-ம் ஆண்டே அரசியல் அமைப்பு சட்டம் முழு வடிவம் பெற்றுவிட்டாலும் நமது தலைவர்கள் இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடிய ஜனவரி 26-ம் தேதியே மக்களாட்சி மலர்ந்த நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். மக்களாட்சிக்கு மணிமகுடமாக திகழும் வாக்குரிமை என்பதுவும் 21 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கிடைத்த நாளும் இதுவே.