2 ஆண்டு கட்டாய ராணுவ பயிற்சி.. மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ரேஷன்.. சுயேச்சையின் தேர்தல் அறிக்கை
2 ஆண்டு ராணுவ பயிற்சி வழங்கப்படும் என ஸ்ரீபெரும்புதூர் சுயேச்சை வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சுயேச்சை வேட்பாளர்கள்தான் தமிழகத்தை பொறுத்தவரை அதிக அளவில் களத்தில் இருப்பார்கள். அவர்களை யாரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஆனால் மொத்த மாநிலத்தையுமே தம் பக்கம் திரும்ப வைக்கக் கூடிய அளவுக்கு அவர்களில் பலர் நிறைந்த அறிவுடன், ஞானத்துடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் விருத்தகிரி.
கவிஞர் சொல்கேளான் ஏ.வி. கிரி என்பது இவரது இயற் பெயர். தாம்பரத்தில் வசித்து வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் ஆட்டோ சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகியுள்ளனர். இதற்கு யார் காரணம். நம்மிடம் என்ன இல்லை. எல்லாமும் இருக்கிறது. ஆனால் நமது மக்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே நன்றாக உள்ளனர். 90 சதவீதம் பேர் வறுமையில்தான் வாடுகின்றனர். இதற்கு யார் காரணம் என்று கேட்கிறார் விருத்தகிரி.
சூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு
நமது நாட்டை மேம்படுத்த அவர் பல்வேறு யோசனைகளையும், திட்டங்களையும் முன்வைக்கிறார். நதி நீர் இணைப்பு அதில் முக்கியமானது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை. இலவசங்களை முதலில் நிறுத்த வேண்டும். மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இவரது சில முக்கிய திட்டங்கள்.
மாணவர்களுக்கு 2 ஆண்டு கட்டாய ராணுவப் பயிற்சியை இவர் வலியுறுத்துகிறார். 60 வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் என்பது இவரது அதிரடியான திட்டமாகும்.
இது மட்டுமே தான் சார்ந்த தாம்பரம் பகுதிக்கும் தனிப் பெரும் திட்டங்களை முன்வைக்கிறார் வேட்பாளர் விருத்தகிரி. உண்மையிலேயே அறிவார்ந்த திட்டங்களாகவே இவரது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை காட்சி தருகின்றன.
வேட்பாளர் விருத்தகிரி நமக்கு அனுப்பி வைத்துள்ள தேர்தல் அறிக்கையை நீங்களும் பாருங்கள்.