அண்ணாமலை அவர்களே இதற்கு பதில் சொல்லுங்க! பாதயாத்திரையால் ஒரு பயனுமில்லை! -கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்
சென்னை: அண்ணாமலை ஊர் தோறும் ஊர்வலம் போவதால் எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை என்றும் வேண்டுமென்றால் முன் எச்சரிக்கையாக 10 டஜன் கர்ச்சிப்புகளை அவர் வாங்கி வைத்துக் கொள்ளலாம் எனவும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கிண்டல் அடித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை அவர்களே இதற்கு பதில் சொல்லுங்க என பாஜக மீதான ஊழல் புகார்களை பட்டியல் போட்டிருக்கிறார். இது தொடர்பாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள பதிவு வருமாறு;
''காமெடி தர்பார் உதிரி ஆக்டர் அண்ணாமலைக்கு ஒரு சில விஷயங்களை நினைவுபடுத்த விரும்புகிறோம். தமிழகத்தில் ஊழல் கறை படித்த அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக ஊர் தோறும் ஊர்வலம் போவதால் எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.

மாறாக, மக்கள் எள்ளி நகையாட போகிறார்கள். வேண்டுமென்றால் முன் எச்சரிக்கையாக 10 டஜன் கர்ச்சிப்புகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிரயோஜனமாக கூட இருக்கும்.''
''ஐ.பி.எல். முறைகேடில் ஈடுபட்ட லலித் மோடிக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் களமிறங்கியவர்கள் பாஜக ஒன்றிய அமைச்சராய் இருந்த சுஷ்மா ஸ்வராஜின் கணவரும் புதல்வரும். வடகிழக்கு மாகாணங்களில் நீர் மின்சாரம் தயாரிக்க (ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் பிளாண்ட்) நிர்மாணிக்கப்பட்ட அணைகள் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் பாஜகவை சேர்ந்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் சகோதரர்.''
''2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளுக்காக புத்தகங்கள் மற்றும் கடலை மிட்டாய்(chikku scam) வாங்கும் ஒப்பந்தத்தை உறவினர்களுக்கு கொடுத்து 206 கோடி ரூபாய் ஊழல் செய்தவர் தான் பாஜகவை சேர்ந்த அப்போதைய அமைச்சர் பங்கஜா முண்டே. 2018 ஆம் ஆண்டு அசாமில் வேலை வாங்கி தருவதாக கைது செய்யப்பட்ட 19 பேரில், பாஜகவின் எம்.பி. ஆர்த்தி சர்மாவின் மகள் பல்லவி சர்மாவும் ஒருவர்.''
''2018 ஆம் ஆண்டு அதானிக்காக ஒப்பந்த விதிமுறைகளை திருத்தி, மக்களின் வரிப்பணத்தில் உருவான 6 விமான நிலையங்களை தானமாக வழங்கி ஊழல் செய்தவர்கள் தான் பாஜகவினர்.குஜராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டி எழுப்புவதற்காக 14,305 ஏக்கர் நிலத்தை, (ஒரு சதுர மீட்டரை ஒரு ரூபாய்க்கு) அதானிக்கு அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்தவர் தான் 56 இன்ச் மார்பளவு கொண்ட மகா யோக்கியவான்.''
''ஊழலுக்கு எதிராக இன்று நடைப்பயணம் தொடங்கவுள்ள அண்ணாமலை அவர்களே.. உங்களுக்கு சில கேள்விகள்...''
''மேற்கு வங்கத்தில் சாரதா ஊழலில் ஈடுபட்ட சுவேந்து அதிகாரியும், ஹிமந்தா பிஷ்வ ஷர்மாவும் யார் என்பதை இன்று தொடங்க உள்ள உங்கள் நடை பயணத்தின் முடிவிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''
''மத்திய பிரதேச மாநிலம் வியாபம் வாரிய ஊழலில் ஈடுபட்ட சிவராஜ் சிங் சவுகான் யார் என்பதை இன்று தொடங்க உள்ள உங்கள் நடை பயணத்தின் முடிவிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''
''கர்நாடக மாநிலத்தில் Paycm என்று நவீன ஊழலில் ஈடுபட்ட பசவராஜ் பொம்மை யார் என்பதை இன்று நீங்கள் தொடங்க உள்ள நடைபயணத்தின் முடிவிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''
''அருணாச்சலப் பிரதேசத்தில் 2000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தனது சொந்த கிராமத்து பெண்களாலே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பெமா காண்டு யார் என்பதை இன்று தொடங்கும் உங்கள் நடை பயணத்தின் முடிவிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''

''மகாராஷ்டிரா மாநிலத்தில் பாசன ஊழலில் ஈடுபட்டு தற்போது பாஜகவில் இணைந்து,அதிகாரம் செலுத்தும் அஜித் பவார் யார் என்பதை இன்று தொடங்க உள்ள நடைபயணத்தின் முடிவிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''
''ரூபாய் 300 கோடி ஊழலில் சிக்கி, சிதறுண்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி பாஜக தான் என்று மோடியின் காலில் விழுந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயண் ராணே யார் என்பதை இன்று தொடங்க உள்ள நடைபயணத்தின் இறுதியிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''
''அந்நிய செலாவணி ஊழல் வழக்கில் அமலாக்க பிரிவால் கைது செய்யப்பட்ட பாவனா காவிலி யார் என்பதை இன்று தொடங்கும் உங்கள் நடைப்பயணத்தின் இறுதியிலாவது சொல்லி விடுவீர்கள் தானே அண்ணாமலை?''












Click it and Unblock the Notifications