அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் உடனடியாக ஆய்வு நடத்துக... கொங்கு நாடு ஈஸ்வரன் கோரிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளையும், ரத்த வங்கிகளில் சேகரித்து வைத்துள்ள ரத்த மாதிரிகளையும் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
கர்ப்பிணி பெண் ஒருவர், கடந்த 3ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கி வந்து, அதை செலுத்திய பிறகு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.
ரத்தத்தை பரிசோதிக்காமலேயே கர்ப்பிணிக்கு செலுத்தி அதன் மூலம் அப்பெண்ணுக்கு எச்ஐவி நோய் தொற்று ஏற்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
கொமதேக வலியுறுத்தல்
இந் நிலையில், அரசு மருத்துவமனைகளையும், ரத்த வங்கிகளில் சேகரித்து வைத்துள்ள ரத்த மாதிரிகளையும் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அலட்சியத்துக்கு கண்டனம்
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. ரத்த தானத்தின் மூலம் பெறப்பட்ட ரத்தத்தை பணியாளர்கள் சரியான ஆய்வுக்கு உட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பரிசோதனை செய்யவேண்டும்
ரத்த வங்கிகளிலிருந்து பெறப்படும் ரத்தத்தை பெரும்பாலான மருத்துவ மனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அப்படியே நோயாளிகளுக்கு ஏற்றப்பட்டு வருவது மிகவும் ஆபத்தானது என்பதை மருத்துவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றும் முன்னால் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் இந்த தவறு தடுக்கப்பட்டிருக்கும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை
தமிழகத்தில் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மத்தியில் இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆய்வுக்கு உட்படுத்துக
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளையும், ரத்த வங்கிகளில் சேகரித்து வைத்துள்ள ரத்த மாதிரிகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. எனவே தமிழக அரசும், முதலமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.