கணினி தகவல்கள் உளவு.. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து.. வேல்முருகன் கொந்தளிப்பு
Recommended Video
சென்னை: அனைத்து கணினிகளையும் மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிப்பதுதான் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் வைத்திருக்கும் தகவல்களைக் கண் காணிப்பது, தகவல் பரிமாற்றத்தை கண்காணிப்பது, அவற்றை இடை மறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10 விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்து உள்ளது.
அதன்படி, உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, மத்திய நேரடிவரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோழைத்தனமான சர்வாதிகாரம்
அச்சமும் கோழைத்தனமும்தான் சர்வாதிகாரம் என்பது; அது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கிறது என எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வேவுபார்க்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது.
சர்வாதிகாரம் வழங்கி ஆணை
அனைத்து தொலைபேசிப் பேச்சுக்களையும் கம்ப்யூட்டர் பதிவுகளையும் கண்காணிக்க, அதாவது வேவுபார்க்க, 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு சர்வாதிகாரம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். அந்த 10 அமைப்புகளுக்கும் வழங்கியுள்ள கூடுதல் அதிகாரங்கள், ஒன்றிய உள்துறைச் செயலர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள ஓர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆய்வு செய்ய அதிகாரம்
அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்தல், தகவல்களை ஆய்வு செய்தல், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துப் பார்த்தல், தகவல்களை அழித்தல், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கி உள்ளன. மேலும், இந்த 10 அமைப்புகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வில்லையெனில் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் உண்டு என்கிறது உள்துறை அறிவிக்கை.
தனிநபர் சுதந்திரம்
இது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கும் முயற்சியாகும். எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய தனிநபர் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குவதாகும். பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல் பரிமாறி கொள்வதைக் கண்டு பிடிக்கவே இந்த அதிகாரங்கள் எனச் சொல்லும் காரணம் உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், உளவு அமைப்புகள் ஏற்கனவே இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
வக்கிர நடவடிக்கை
முற்றிலும் அரசியல் காரணங்களே இதன் பின்னணியில் உள்ளன. மதவாதம், வகுப்புவாதம் தவிர ஆக்கபூர்வமான எந்தக் கொள்கையுமற்ற ஆளும் பாஜக இந்திய அரசியலில் மேற்கொண்டு நகர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதே, இந்த வக்கிர நடவடிக்கையை எடுக்கக் காரணமாகும். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை தான் இது.
வலியுறுத்தல்
அச்சமும் கோழைத்தனமும்தான் சர்வாதிகாரம் என்பது; அது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கிறது என எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இந்த வேவுபார்க்கும் உத்தரவைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.